Published : 24 May 2017 10:39 AM
Last Updated : 24 May 2017 10:39 AM

தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும்: சீமான் பேட்டி

தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வராது, ஆனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டும் வருவார்கள் என்றால் அது எப்படி நியாயமாகும்?

தமிழகத்தில் அதிமுக பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மோடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் எப்படி சந்திக்கிறார்? இதில் எந்த அரசியலும் இல்லை எனக்கூறுவதை எப்படி நம்புவது?

தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தில் நானும் உடன்படுகிறேன். ஆனால், தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலுமே அடிப்படை அமைப்பு கெட்டுப்போய் உள்ளது. இந்தியாவின் பொருளாதார கொள்கை, கல்விக் கொள்கை, நீர் மேலாண்மைக் கொள்கை இப்படி பலவும் கெட்டுப்போய் உள்ளன.

அடிப்படை அமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் ரஜினி கருத்தில் புதிதாக ஒன்றும் இல்லை"

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x