Published : 04 Mar 2016 03:40 PM
Last Updated : 04 Mar 2016 03:40 PM

தமிழகத்தில் மே 16-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி தேர்தல் அட்டவணை:



வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

ஏப்ரல் 22

மனு தாக்கல் கடைசி நாள்

ஏப்ரல் 29

வேட்பு மனு மீது பரிசீலனை

ஏப்ரல் 30

மனு வாபஸ் பெற கடைசி நாள்

மே 2

தேர்தல் வாக்குப்பதிவு

மே 16

வாக்கு எண்ணிக்கை

மே 19



தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேர்தல் ஆணையர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேர்தல் தேதியை அறிவித்து அவர்கள் கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடக்கிறது.

அண்டை மாநிலமான கேரளா வில் மே 16-ம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறுகிறது. மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் அசாமில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடை பெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 22-ம் தேதி நிறை வடைகிறது. இதேபோல புதுச்சேரி - ஜூன் 2, கேரளா - மே 31, மேற்கு வங்கம்- மே 29, அசாம் - ஜூன் 5 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை களின் பதவிக் காலம் முடிகிறது.

இதைத் தொடர்ந்து 5 மாநிலங் களுக்கான தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி டெல்லியில் நேற்று அறிவித்தார். அவர் கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் நிறைவடைவதால் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பள்ளி பொதுத் தேர்வு, திருவிழா ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் மே 16-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 3 மாநிலங்களில் ஏப்ரல் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 30-ல் நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 5 கோடியே 8 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக மாநிலம் முழுவதும் 65,616 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளன. 9,27,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 913 வாக்குச் சாவடிகள் அமைக்கப் படும்.

கேரளாவில் 140 தொகுதிகளும் 2 கோடியே 56 லட்சம் வாக்கா ளர்களும் உள்ளனர். அங்கு 21,498 வாக்குச்சாவடிகள் அமைக்கப் படும்.

மே.வங்கத்தில் 6 கட்டத் தேர்தல்

மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனினும் அங்கு மொத்தம் 7 நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி முதல்கட்டத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 17, 21, 25, 30, மே 5 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

மே-19-ல் வாக்கு எண்ணிக்கை:

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே-19-ல் எண்ணப்படுகிறது.

தேர்தல் முன்னேற்பாடுகள்:

5 மாநிலங்களிலும் தரைத்தளங்களிலேயே வாக்குச்சாவடியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாளச் சீட்டு விநியோகத்தை மத்திய தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும். தேர்தலின்போது வன்முறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் கருவி வசதிகளுடன் பறக்கும் படை அமைக்கப்படும்.

நோட்டாவுக்கு தனி சின்னம்:

வாக்குப்பதிவு இயந்திரத்திரத்தில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நோட்டா என்பது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட முறை.

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x