Published : 31 Mar 2016 01:06 PM
Last Updated : 31 Mar 2016 01:06 PM

தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்று பாமகவே திமுக அல்ல: ராமதாஸ்

தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல ஏமாற்று சக்தி என்பதை மக்கள் அறிந்துள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரின் கவனமும் களப் பணிகளில் தான் இருக்க வேண்டும்.

ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியோ கள நிலவரம் புரியாமல் அ.தி.மு.க.வுக்கு மாற்று தமது கட்சி தான் என்று தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.

ஒரு தேர்தலில் தமது கட்சி தான் வெற்றி பெறும் என்று கூறுவதற்கான அனைத்து உரிமைகளும் அக்கட்சித் தலைவருக்கு உண்டு.

ஆனால், திமுக தான் மாற்று என கருணாநிதி துள்ளிக் குதிப்பது அவரது பலவீனத்தையும், அச்சத்தையுமே காட்டுகிறது.

கள நிலைமை மற்றும் கொள்கை அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க.வுக்கு திமுக எந்த வகையில் மாற்று? மது விற்பனையில் தொடங்கி மழை நிவாரணத்தில் ஊழல் செய்வது வரை அனைத்திலும் இரு கட்சிகளும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை தானே?

இதைத் தானே, "அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று பெருந்தலைவர் காமராஜர் கூறினார்.

உண்மை இவ்வாறு இருக்கும் போது ஊழல் சுனாமி அதிமுகவுக்கு ஊழலின் ஊற்றுக்கண் திமுக எப்படி மாற்று ஆகும்?

தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கான தீர்வு திமுகவிடம் உள்ளதா? மதுவுக்கு எதிராக 35 ஆண்டுகளாக நான் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் மது ஆறாக ஓட தாம் தான் காரணம் என்பதையெல்லாம் மறந்து விட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்று அறிவித்த சந்தர்ப்பவாதக் கட்சி தானே திமுக?

ஊழலில் ஊற்றுக்கண்ணான தி.மு.க.வால் ஊழலை ஒழிக்க முடியாது. இது கலைஞருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், ஊழலை ஒழிப்பதற்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவோம், லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவோம், பொது சேவை சட்டத்தைக் கொண்டு வருவோம் என்றெல்லாம் பா.ம.க. அறிவித்தவுடன், அலறித்துடித்து அவற்றையெல்லாம் நாங்களும் செய்வோம் என உரத்த குரலில் காப்பி அடித்த கட்சி தானே தி.மு.க?

மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து மக்களை சீரழித்தீர்கள். கல்வியை கடைச்சரக்காக மாற்றினீர்கள். மருத்துவம் பெறுவதற்காக மக்கள் கடனாளிகள் ஆகும் நிலைமையை ஏற்படுத்தினீர்கள்.

விவசாயம் செய்யும் உழவர்களுக்கு தீராக்கடனும் தற்கொலையும் மட்டுமே பரிசு என்ற நிலைமையை உருவாக்கினீர்கள்.

இந்த விஷயங்களில் திமுகவுக்கும், அதிமுகவுக்கு ஆறு வித்தியாசங்கள் இல்லை... அரை வித்தியாசம் கூட காண முடியாது.

மாறாக, பதவியேற்ற முதல் நாள்... முதல் கையெழுத்து மது விலக்கு என்கிறோம். அனைவருக்கும் தரமான கல்வி இலவசம், அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசம், விவசாயத்திற்கான அனைத்து இடுபொருட்களும் இலவசம் என்று பா.ம.க. கூறுகிறோம்.

உண்மையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒரே தட்டில் இருக்கின்றன. அது மக்கள் தீண்ட விரும்பாத தட்டு. மாறாக அ.தி.மு.க., தி.மு.க.வால் ஏற்பட்ட அனைத்து தீமைகளையும் களையும் எண்ணத்துடன் உங்களுக்கு எதிரான தட்டில் பா.ம.க. உள்ளது. இது தான் மக்கள் விரும்பும் தட்டு ஆகும்.

அவ்வாறு இருக்கும்போது அ.தி.மு.கவுக்கு தி.மு.க. எப்படி மாற்றாக முடியும்? அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்று பா.ம.க. என்பது தான் எவராலும் புறக்கணிக்க முடியாத உண்மை ஆகும்.

தெளிவாக கூற வேண்டுமானால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று கலைஞர் கூறியிருப்பதே ஒரு நயவஞ்சக திட்டம் ஆகும்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையுமே ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது என்பது தான் மக்களின் விருப்பம். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று தேவை என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த மாற்று தான் பாட்டாளி மக்கள் கட்சி. மக்கள் விரும்பும் மாற்றை அவர்களின் பார்வையிலிருந்து மறைத்து வைத்து விட்டு, அதிமுக, திமுக ஆகிய இரு தீமைகளை மட்டும் மக்கள் முன் வைத்தால் அவற்றிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் கலைஞர் இப்படி ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

கலைஞரின் இந்த நாடகம் வெற்றி பெறாது. இந்த தேர்தலில் திமுக மாற்று அல்ல... ஏமாற்று சக்தி என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து எழுவதற்கு தி.மு.க.வால் முடியவில்லை. 2014 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது.

அதுமட்டுமின்றி, 8 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. களத்திலேயே இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே திமுகவின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டது என்பது தான் உண்மை.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அன்புமணியா, அம்மாவா? என்ற போட்டி தான் நிலவுகிறது. இத்தகைய நிலையில் திமுக தான் மாற்று என்பது நல்ல நகைச்சுவை.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் கதாநாயகன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான். கதாநாயகி பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தான்.

இந்த கூட்டணி தான் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்... தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக சுரண்டி வந்த திமுகவும், அதிமுகவும் வீழ்ச்சியடையப் போவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x