Last Updated : 28 Mar, 2017 09:26 PM

 

Published : 28 Mar 2017 09:26 PM
Last Updated : 28 Mar 2017 09:26 PM

டெல்லியில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்: குடியரசு தலைவர், மூன்று மத்திய அமைச்சர்களிடம் மனு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ராதா மோகன் சிங் ஆகியோரை சந்தித்தனர்.

தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி, ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 13-ம் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் எலிக்கறி சாப்பிடுவதாகக் கூறி போராட்டம் நடத்திய விவசாயிகள், நேற்று பாம்புக்கறி உண்பதாகக் கூறி போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் இதையறிந்த டெல்லி வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி அது குற்றமாகிவிடும் என சுட்டிக் காட்டினர். இதையடுத்து நேற்று பிரதமர் மோடி போல் முகமூடி அணிந்த ஒருவரை அமரவைத்து அவரிடம் மனு கொடுப்பது போல் போராட்டம் நடத்தினர். பிரதமர் தங்களை சந்திக்க நேரம் ஒதுக்காததை கண்டித்து இப்போராட்டம் நடத்தியதாக விவசாயிகள் கூறினர்.

இந்நிலையில் நேற்று அரசியல் பிரமுகர்கள் பலர் விவசாயிகளை சந்தித்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் சோம்நாத் பாரதி, திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அதிமுக ஒபிஎஸ் அணி எம்.பி. வி.மைத்ரேயன் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை விவசாயிகள் சந்தித்து பேசினர் ஜி.கே.வாசன் இதற்கான ஏற்பாடு களை செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோரை விவசாயிகள் சந்திப்பதற்கு தம்பிதுரை ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பின் போது தம்பிதுரையுடன், டெல்லி வந்திருந்த தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவும் உடன் இருந்தார். பிரதமரிடமும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான மனுவை தம்பிதுரை அளித்ததாக தெரிகிறது.

இறுதியாக திமுக எம்பியான திருச்சி சிவா, தமிழக விவசாயிகளை நிதி அமைச்சர் அருண்ஜேட்லியிடம் அழைத்துச் சென்றார். ஜேட்லியுடன் நேற்று இரண்டாவது முறையாக விவசாயிகள் சந்தித்து பேசினர்.

இந்த நான்கு சந்திப்பு களிலும் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமை யிலான தமிழக விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அய்யாக்கண்ணு பேட்டி

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறிய போது, ‘‘மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மீண்டும் கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயக் கடன்களை நாடு முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டுமே என்று யோசித்தவர், இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். முந்தைய சந்திப்பைவிட சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் முழு திருப்தி இல்லை’’ என்றார்.

முன்னதாக விவசாயிகளை சந்தித்த தம்பிதுரை கூறும்போது, “தமிழக விவசாயிகள் நாட்டுக்கே வழிகாட்டியாக இங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயி களின் குறைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவே நானும் தமிழ வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் இங்கு வந்துள்ளோம். அம்மா வால் உருவாக்கப்பட்ட நாங்கள் விவசாயிகளின் குறைகளை தீர்க்கக் கடமைப்பட்டுள்ளோம். பிரதமரையும் உள்துறை, நிதி, வேளாண் துறை அமைச்சர்களை யும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம்” என்றார்.

நாடாளுமன்ற இரு அவை களிலும் தமிழக விவசாயிகள் பிரச்சினையை மீண்டும் எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. எனவே, போராட்டத்தை கைவிடு மாறு அதிமுக எழுப்பிய கோரிக் கையை விவசாயிகள் நிராகரித் தனர்.

டெல்லியில் போராட்டம் நடத்து வதற்கு தமிழகத்தில் இருந்து 100 விவசாயிகள் வந்திருந்தனர். இவர்களில் 35 பேருக்கு உடல்நலம் குன்றியதால் அவர்கள் தமிழகம் திரும்பியதாக சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு ‘திஇந்து’விடம் கூறினார்.

காவிரி நதி நீர் ஆணையம் அமைப்பது, தென்னக நதிகளை இணைப்பது, தமிழகத்திற்கு கூடுதல் வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் தமிழகம் சார்பில் நடைபெறும் போராட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான தமிழக அரசியல் தலைவர்கள் நேற்று விவசாயிகளை சந்தித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x