Published : 17 Aug 2014 11:32 AM
Last Updated : 17 Aug 2014 11:32 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தப்படுமா?- ஐஏஎஸ் தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டதால் எதிர்பார்ப்பு

ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு அதிகரிக்கப்படுமா? என தமிழக மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று பணியில் சேருவோர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று சொந்த மாநிலத்திலேயே பணியைத் தொடரலாம். எனவே, குரூப்-1 தேர்வுக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும்.

பொதுப்பிரிவினருக்கு வயது 30 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பின ருக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டிருந் தது. அந்த சலுகையும் 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்துவிட்டது.

சிவில் சர்வீசஸ் தேர்வு வயது வரம்பு கடந்த ஆண்டு வரை பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், ஓபிசி பிரிவினருக்கு 33 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 35 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டிலிருந்து வயது வரம்பு அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி குரூப்-1 தேர்வெழுதுவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் தேன்மொழி கூறியதாவது:

குரூப்-1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடுகிறது. ஐஏஎஸ் தேர்வைப் போல குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. 2001 முதல் 2013 வரையில் கடந்த 12 ஆண்டுகளில் 5 குரூப்-1 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் குரூப்-1 தேர் வெழுத வயது வரம்பு 50 ஆகவும், ஆந்திராவில் 43 ஆகவும், குஜராத், பிஹார், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட வடமாநிலங்களில் 45 ஆகவும் உள்ளது. எனவே, தமிழ்நாட்டிலும் வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும். ஒருவேளை வயது வரம்பை நிரந்தரமாக அதிகரிக்க முடியாவிட்டால்கூட, குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டு அறிவிப்புகளுக்காவது 45 வயது வரை உள்ளவர்களை தேர்வெழுத அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அரசிடம் இறுதி முடிவு

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு பிரச்சினை குறித்து டிஎன் பிஎஸ்சி செயலாளர் மா.விஜய குமாரிடம் கேட்டபோது, வயது வரம்பை அதிகரிக்கக்கோரி பல தேர்வர்கள் எங்களிடம் முறை யிட்டனர். அவர்களின் கோரிக் கைகளை அரசின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தோம். வயது வரம்பை அதிகரிப்பது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x