Published : 23 Feb 2015 03:28 PM
Last Updated : 23 Feb 2015 03:28 PM
ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல் வராக வரவேண்டும் என்பதற்காக கராத்தே வீரர் ஹுசைனி தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டு 7 நிமிடங்கள் இருந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல் வராக வர வேண்டும் என்பதற்காக கராத்தே மற்றும் வில் வித்தை வீரர் ஹுசைனி தன்னைத் தானே சிலுவையில் அறைந்துகொள்ளும் பிரார்த்தனை நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் உள்ள வில் வித்தை பள்ளியில் நேற்று நடந்தது.
ஹுசைனி முதலில் 8 அடி உயரம், 6 அடி அகலம், 300 கிலோ எடை கொண்ட மர சிலுவையில் படுத்தார். இடது உள்ளங்கையில் சுமார் அரை அடி உயரம் கொண்ட ஆணியை வைத்து தன்னுடைய வலது கையால் சுத்தியை கொண்டு அடித்தார். வலது கை மற்றும் 2 கால்களிலும், அவருடைய மாண வர்கள் ஆணியை அடித்தனர். அதன் பின் ஹுசைனியை சிலுவையுடன் மாணவர்கள் தூக்கி நிறுத்தினர்.
சிலுவையில் 7 நிமிடங்கள்
பகல் 11.30 மணி முதல் 11.37 மணி வரை சிலுவையில் இருந்த படி ஹுசைனி பேசினார். அவர் கூறும்போது, “இளைஞர்கள் தம்மால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும். கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டை விட்டுவிட்டு, நம்முடைய வில் வித்தையை கற்க வேண்டும். ஒலிம் பிக்கில் வில் வித்தை போட்டியில் இளைஞர்கள் பதக்கம் வெல்ல வேண்டும். இதற்கு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும். அப்போதுதான் நாடு நன்றாக இருக்கும். நாடு எல்லா வளமும் பெற முடியும்” என்று கூறினார். அதன்பின் சிலுவையில் இருந்து ஹுசைனியை இறக்கிய மாணவர்கள் உடனடியாக ஆம்பு லன்ஸில் ஏற்றிக்கொண்டு அடை யாறு ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
மும்மத பிரார்த்தனை
சிலுவையில் அறைவதற்கு முன்பு ஹுசைனியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களின்படி பிரார்த்தனை செய் யப்பட்டது. அதன்பின் சிலுவையில் அறைந்துகொள்ளும் பிரார்த்தனை நிகழ்ச்சி தொடங்கியது. சிலுவை யில் அறையப்பட்ட ஹுசைனியின் கைகள் மற்றும் கால்களில் இருந்து ரத்தம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஒருவர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்துகொண்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
சட்டப்படி தற்கொலை முயற்சி
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீ.கண்ணதாசன் கூறும்போது, “ஹுசைனி செய்தது இயேசுவை இழிவுபடுத்தும் செய லாகும். சிலுவையில் அறைவது என்பது மத நம்பிக்கை தொடர் பானது. அதையும் ஹுசைனி இழிவுபடுத்தியுள்ளார். இது சட்டப் படி தற்கொலை முயற்சியாகும். அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
போலீஸ் ஆலோசனை
அடையாறு போலீஸ் துணை கமிஷனர் கண்ணன் கூறும்போது, “ஹுசைனி செய்தது தவறு. சட்டப்படி என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.
ரத்தக்குழாய் இல்லாத இடம்
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் கனகசபை கூறும்போது, “கத்தி, ஆணி போன்ற கூர்மையான கருவிகளால் ரத்தக்குழாயில் சேதம் ஏற்பட்டால்தான் ரத்தம் அதிக அள வில் வெளியேறும். ரத்தக்குழாய் இல்லாத இடங்களில் ஆணியை அடித்தால் மிகவும் குறைந்த அளவு ரத்தமே வெளியேறும். மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தால், எந்த இடத்தில் ரத்தக்குழாய் இருக்கிறது. எந்த இடத்தில் ரத்தக்குழாய் இல்லை என்பது தெரிந்துவிடும்” என்றார். .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT