Published : 17 Jun 2015 07:01 PM
Last Updated : 17 Jun 2015 07:01 PM

ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் உரிமம், ஆவணங்களை பறிமுதல் செய்ய அரசு உத்தரவு

தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

விபத்துகளில் உயிரிழப்பை தடுப்பதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று 1985-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின், 1988-ல் வெளியான மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-லும் ஹெல்மெட் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இதை அமல்படுத்து வதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டவில்லை. அவ்வப்போது நீதிமன்றங்கள் இதில் தலையிட்டு, ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவுகளை பிறப் பிக்கும். ஆனாலும், ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் வாகன ஓட்டி களை போலீஸார் எச்சரிப்பதும், அபராதம் வசூலிப்பதும் நடக்கும்.

இந்நிலையில், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் ஹெல்மெட் அணியாததால்தான் தலையில் காயமடைந்து இறந்தார் என்று காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்’ என்று உத்தரவிட்டார். ஹெல்மெட் அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்யலாம். இந்தத் தகவலை ஜூன் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக வாகன ஓட்டிகளுக்கு உள்துறை செயலரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறை வேற்றியது குறித்த அறிக்கையை ஜூன் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகை யில் ஹெல்மெட் அணிவதை கட்டா யமாக்கி தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது. இது தொடர்பாக உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பயணிப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் மோட்டார் வாகனச் சட்டம்- 1988 பிரிவு 206-ல் தெரிவிக்கப் பட்டுள்ள விதிமுறைகள்படி, வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும். ஐஎஸ்ஐ சான்று பெற்ற புதிய ஹெல்மெட் மற்றும் அதை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காட்டினால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பித் தரப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு விதிவிலக்கு இல்லை

இருசக்கர வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘வாகனத்தின் பின்னால் அமர்பவர் ஆண், பெண் யாராக இருந்தாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குழந்தைகளுக்கு வேண்டாம் என்றாலும் விபத்து ஏற்படும்போது அவர்களுக்கும் காயம் ஏற்படுகிறது. எனவே, குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவிப்பதில் தவறில்லை. சீக்கிய இனத்தவருக்கு ஏற்கெனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மருத்துவ ரீதியாக பாதிப்புள்ளவர்களுக்கான விலக்கு குறித்த நிலையான உத்தரவுகள், விளக்கங்கள் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x