Published : 10 May 2017 09:03 AM
Last Updated : 10 May 2017 09:03 AM

சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசுக்கு வருமானவரி துறை கடிதம்: அமைச்சர்கள், அதிகாரிகள், எதிர்க்கட்சியினர் கலக்கம்

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியிடம் இருந்து லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய அரசுக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், அவர்களது வீடுகளில் மத்திய அரசின் அமைப்பு விரைவில் சோதனை நடத்தக்கூடும் என்று தெரிகிறது. லஞ்சப் பட்டியலில் எதிர்க்கட்சி பிரமுகர்களின் பெயர் களும் இருப்பதால் அவர்களும் கலக்கம் அடைந் துள்ளனர்.

பொதுப்பணித் துறை ஒப்பந்த தாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி ஆகியோரது வீடுகளில் வருமானவரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 8-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் ரூ.147 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டன. ரூ.147 கோடியில் ரூ.34 கோடி மதிப்பிலானவை புதிய ரூ.2000 நோட்டுகள் ஆகும்.

புதிய ரூ.2000 நோட்டு களை பெற்றது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம்குமார், கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச் சந்திரன் ஆகியோரும் பண மோசடிக்கு உதவியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சேகர் ரெட்டி உட்பட 5 பேரும் கைது செய்யப் பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டனர்.

சேகர் ரெட்டிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக கொல்கத்தாவை சேர்ந்த பரஸ்மல் லோதா, சென்னையை சேர்ந்த அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சோதனையின்போது சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த டைரியில், அரசின் ஒப்பந்தங்கள் பெறுவதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்கப்பட்டது என்ற விவரம் பெயருடன் குறிப்பிடப்பட்டிருந்தது. ரூ.300 கோடி வரை கமிஷனாக கொடுக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.

50 அதிகாரிகளின் பட்டியல்

இதுதவிர, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா போன்ற போதை பொருட்களை, லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனைக்கு அனுமதித்த ஐபிஎஸ் அதிகாரி கள் உட்பட பல துறைகளை சேர்ந்த 50 அதிகாரிகளின் பட்டியலையும் வருமானவரித் துறை தயாரித்துள்ளது.

லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலை அதற்கான ஆதாரங்களுடன் தமிழக அரசுக்கு வருமான வரித் துறை அனுப்பியுள்ளது. அத்துடன், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்ற பரிந்துரைக் கடிதத்தையும் வருமானவரித் துறை அனுப்பியுள்ளது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, லஞ்சம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலோடு பரிந்துரைக் கடிதம் அனுப்பியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குறிப்புடன் மத்திய அரசுக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் லஞ்சம் வாங்கியவர்களின் வீடுகளில் மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகள் விரைவில் சோதனை நடத்தக்கூடும் என்று தெரிகிறது.

ஆளுங்கட்சியினர் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி பிரமுகர்கள் பலரும் சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித் துறை பரிந்துரை செய்திருப்பதால், அவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x