Published : 03 Nov 2016 10:00 AM
Last Updated : 03 Nov 2016 10:00 AM

சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை

வீட்டில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சென்னை மேற்கு மாம்பலம் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி சுதா(53). இவர் தனது கணவர் பாஸ்கரனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்களின் மகன் பெங்களூரில் பணிபுரிகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் லட்சுமி சுதா, இன்சூரன்ஸ் தொடர்பான வழக்கு களில் ஆஜராகி வந்துள்ளார். மேற்கு மாம்பலம் வீட்டில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தங்கையின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலை யில் லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்று மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது.

தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர். தகவலின்பேரில் குமரன் நகர் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். நேற்று முன்தினம் லட்சுமி சுதாவுக்கு உறவினர் ஒருவர் மூலம் அவரது தங்கை சாப்பாடு கொடுத்து அனுப்பியுள்ளார். அப்போது பலமுறை கூப்பிட்டும் லட்சுமி சுதா கதவை திறக்காததால் அதை வெளியிலேயே வைத்து விட்டு அந்த நபர் சென்றுள்ளார். அந்த சாப்பாடு நேற்று வரை அதே இடத்தில் இருந்துள்ளது. இதனால் இரு நாட்களுக்கு முன்பே லட்சுமி சுதா கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

தி.நகர் ஹபிபுல்லா சாலையில் வீட்டில் தனியாக வசித்த சாந்தி என்ற பணக்கார பெண் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அங்குவதற்குள் தனியாக வசித்த மற்றொரு பெண்ணும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x