Published : 17 May 2015 07:28 PM
Last Updated : 17 May 2015 07:28 PM

அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் திடீர் ராஜினாமா: ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்- சென்னையில் முதல்முறையாக களம் இறங்குகிறார்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.வெற்றிவேல் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை பேரவைத் தலை வர் உடனடியாக ஏற்றுக்கொண் டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காகவே வெற்றி வேல் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இழந்தார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பதவியேற்றார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற காரணத்தால் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 29-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத் தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை ஏற்பதில் ஜெயலலிதாவுக்கு இருந்த சட்டரீதியான தடை நீங்கியது. அதனால், அவர் மீண்டும் முதல்வ ராக பதவியேற்பதற்கான நட வடிக்கைகள் தொடங்கியுள்ளன.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக (முதல்வராக) ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வார் என்றும், 22 அல்லது 23-ம் தேதி ஜெயலலிதா பதவியேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்எல்ஏவாக இல்லாத நிலையில் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா, 6 மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெறவேண்டும். ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பல எம்எல்ஏக்கள் அறிவித்தனர். அதிமுகவில் மட்டுமின்றி, அதிருப்தி தேமுதிக எம்எல்ஏக்கள் சுந்தரராஜன், அருண் சுப்பிரமணியம், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், அணைக்கட்டு தொகுதி பாமக எம்எல்ஏ கலையரசன் ஆகியோரும் அவ்வாறு அறிவித்தனர். அதனால், ஜெயலலிதா எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவர் சென்னையில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வந்தன.

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜினாமா



இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.வெற்றிவேல் தனது பதவியை நேற்று திடீரென ராஜி னாமா செய்தார். நேற்று காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் ப.தனபாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வெற்றிவேல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பேரவைச் செயலாளர் ஜமாலுதீனுடன் தனபால் ஆலோசனை நடத்தினார். பின்னர் வெற்றிவேலின் ராஜினாமா ஏற்கப்பட்டு, மாலையில் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது தொடர் பாக பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வெற்றிவேல் 17-5-2015 முதல் பதவி விலகியுள்ளார். இதை அதே தேதியில் பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி யிடுவது உறுதியாகியுள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். சென்னையில் இதுவரை ஜெய லலிதா போட்டியிட்டதில்லை. இப் போது அவர் ஆர்.கே.நகர் தொகுதி யில் போட்டியிடப் போவதாக வந்துள்ள தகவலால் சென்னையில் உள்ள அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவையின் பதவிக் காலம் ஓராண்டு முழுமையாக இருந்தால் மட்டுமே இடைத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த முடியும். கடந்த 2011-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு மே 23-ம் தேதிதான் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. எனவே, மே 23-க்கு முன்பாக யாராவது ஒருவர் ராஜினாமா செய்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கும். அதனால்தான், வெற்றிவேல் மே 17-ம் தேதியே ராஜினாமா செய்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராஜினாமா குறித்து ‘தி இந்து’ சார்பில் வெற்றிவேலிடம் பேசியபோது, ‘‘எல்லாம் அம்மாவுக் காகவே’’ என்று மட்டும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x