Published : 27 Dec 2013 07:47 AM
Last Updated : 27 Dec 2013 07:47 AM

சென்னையில் மேலும் 50 மினி பஸ்கள்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அடுத்த மாதத்தில் மேலும் 50 மினி பஸ்களை இயக்க உள்ளது. இதில், வட சென்னையில் புதிய வழித்தடங்களைத் தேர்வு செய்து மினி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து முக்கியமான பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகரப் போக்குவரத்து கழகம் மூலம்

100 மினி பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது சென்னையில் பல்லாவரம், ராமாபுரம், போரூர், குரோம்பேட்டை, அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட முக்கியமான பகுதிகளை இணைக்கும் வகையில் மினி பஸ்கள் செல்கின்றன.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மினி பஸ் மூலம் சராசரியாக ரூ.8,000 வசூல் கிடைத்து வருகிறது. சில வழித்தடங்களில் பெரிய பஸ்களின் வசூலை விட, அதிகமாகவும் கிடைக்கிறது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து துறையின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் இயக்கப்படும் மினி பஸ்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் 50 மினி பஸ்களை தயாரிக்கிற பணி முடியும் நிலையில் உள்ளது.

அடுத்த மாதத்தில் புதியதாக 50 மினி பஸ்கள் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு வந்துவிடும். அந்த மினி பஸ்களுக்கான வழித்தடங்களும் பெரும்பாலும் தேர்வாகிவிட்டன.

இந்த முறை வடசென்னையின் உள்பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையின் மேற்குபகுதியான போரூர், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையிலும் வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x