Published : 28 May 2015 08:06 AM
Last Updated : 28 May 2015 08:06 AM

சிஎம்டிஏ அனுமதி கொடுத்ததாக போலி ஆவணங்கள் தயாரிப்பு: தனியார் மருத்துவக் கல்லூரித் தலைவர், மனைவி கைது - கல்லூரி மேலாளரையும் கைது செய்தது மத்திய குற்றப் பிரிவு போலீஸ்

சிஎம்டிஏ அனுமதி கொடுத்ததுபோல போலி ஆவணங்கள் தயாரித் ததாக தனியார் மருத் துவக் கல்லூரித் தலைவர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மேலாளர் ஆகியோரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மாங்காட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று உள்ளது. இதன் தலைவர் ராதாகிருஷ்ணன் (71). மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்குவதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்சிஐ) கல்லூரி நிர்வாகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

விண்ணப்பத்துடன் மருத்துவக் கல்லூரியில் உள்ள வசதிகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கொடுத்த அனுமதிக்கான ஆவணங்கள் போன்றவை இணைத்து அனுப்பப் பட்டன.

அதிகாரி புகார்

கட்டிட அனுமதி பெற்றதாக கொடுக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய, அந்த ஆவணங்களை சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுப்பிவைத்தது. ஆவணங்களை ஆய்வு செய்த சிஎம்டிஏ அதிகாரிகள், அவை போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, போலியாக ஆவ ணங்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிஎம்டிஏ அதிகாரி விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவு

புகாரின்பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, தனியார் மருத் துவக் கல்லூரித் தலைவர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி யும் கல்லூரி நிர்வாகியுமான கோமதி (65), மேலாளர் மனோகரன் (61) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது போலியாக ஆவணங்கள் தயாரித்தல், மோசடி, பொய் கூறுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி வளாகம் அருகிலேயே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது. இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கும் போலியான ஆவணங்கள் கொடுத்ததாகவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், இந்தக் கல்லூரிகளின் பெயரில் வங்கியில் ரூ. 1.25 கோடி கடன் வாங்கியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x