Published : 23 Dec 2015 07:38 AM
Last Updated : 23 Dec 2015 07:38 AM

சமூக வலைதளங்களில் இருந்து ‘பீப்’ பாடலை உடனடியாக அகற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதளங்களில் இருந்து ‘பீப்’ பாடலை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் ‘பீப்’ பாடல் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருவர் மீதும் கோவை, சென்னை போலீஸார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

சிம்பு தரப்பில் ஆஜரான வக்கீல் முத்துகுமாரசாமி, “பாடலை சிம்பு வெளியிடவில்லை. யாரோ மூன்றாவது நபர் இடைச்செருகல் செய்து வெளியிட்டுள்ளார்’’ என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ், உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நளினி ஆகியோர் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தனர்.

பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் ஆஜராகி, “இப்பாடல் மூலம் பெண்களை சிம்பு கொச்சைப் படுத்தியுள்ளார். நீதிபதி அனுமதித்தால் பாடலை போட்டுக்காட்ட தயாராக இருக்கிறோம்” என்றார்.

“உடனடியாக இந்தப்பாடலை சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற எடுக்கவேண்டிய தொழில்நுட்ப நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று நீதிபதி வாய்மொழியாக உத்தரவிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், “போலீஸார் முன்பு சிம்பு இதுவரை ஆஜராக வில்லை. அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்உதாரணமாகிவிடும்” என்றார்.

அதையடுத்து, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சிம்பு ஆஜராவதற்கு கோவை போலீஸார் விதித்த கெடுவை ஜனவரி 2-ம் தேதியில் இருந்து ஜனவரி 5-ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x