Published : 08 Nov 2015 02:27 PM
Last Updated : 08 Nov 2015 02:27 PM

சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி: நிதிஷ், லாலுவுக்கு அன்புமணி வாழ்த்துக் கடிதம்

பிஹார் தேர்தல் முடிவுகள் சமூக நீதிக்கும் வளர்ச்சிக்கும் கிடைத்த வெற்றி என்று நிதிஷ் குமாருக்கும், லாலு பிரசாத் யாதாவுக்கும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

நிதிஷ் குமாருக்கு அவர் எழுதிய கடிதத்தில், "பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்திய வரலாற்றில் இது ஒரு சிறப்புமிக்க தருணம் ஆகும்.

உங்களின் தலைமையையும், பிஹார் மாநிலத்தின் வளர்ச்சியில் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அங்கீகரிக்கும் வகையில் பீகார் மாநில மக்கள் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை சமூக நீதிக்கும், வளர்ச்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

உங்கள் தலைமையில் பிஹார் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பிஹார் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுக்க இன்னும் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். இதற்காக நீங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனினும், மிகச்சிறந்த தலைவரான நீங்கள் அனைத்துத் தடைகளையும் கடந்து வளமான, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பிஹாரை அழைத்துச் செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அன்புமணி கூறியுள்ளார்.

லாலு பிரசாத் யாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ''சமூக நீதி மற்றும் சமத்துவத்தில் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அங்கீகரிக்கும் வகையில் பிஹார் மாநில மக்கள் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதை வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

நலிவடைந்திருந்த ரயில்வேத் துறையை லாபத்தில் இயங்க வைத்து வரலாறு படைத்தீர்கள். உங்களின் சிறப்பான வழிகாட்டுதலில், அனைத்துத் துறை வளர்ச்சியிலும் மற்ற மாநிலங்களை பிஹார் மாநிலம் எட்டிப் பிடிக்கும் என்பதுடன், புதிய உச்சங்களை எட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x