Published : 19 Feb 2017 07:51 PM
Last Updated : 19 Feb 2017 07:51 PM
சட்டப்பேரவையில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் என்று திருச்சி சிவா எம்.பி. குற்றம்சாட்டினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடந்தது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், பேரவைத் தலைவர் தனபாலை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவரின் உத்தரவின்பேரில் திமுக எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இந்நிலையில், சட்டை கிழிந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அதற்குப் பிறகு ஆளுநரிடம் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விளக்கம் தந்தார்.
இந்த சூழலில் திமுக எம்பிக்கள் இன்று ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் குறித்து மனு கொடுத்தனர்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், ''சட்டப்பேரவையில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார். எதிர்க்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT