Published : 18 Feb 2017 11:40 AM
Last Updated : 18 Feb 2017 11:40 AM

சட்டப்பேரவையின் முதல் அரை மணிநேர பரபரப்பு விவரம்

அமளி, முழக்கம், வேண்டுகோள், நிராகரிப்பு என சட்டப்பேரவையின் முதல் அரைமணி நேரம் பரபரப்பாக இருந்தது.

சட்டப்பேரவையில் இன்று பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர். இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார்.

உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் கூறினார். சபாநாயகர் தவிர, சட்டப்பேரவையில் 230 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ''ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க வேண்டும்'' என்றார்.

ஸ்டாலின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக, சிறைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x