Published : 27 Nov 2013 11:14 AM
Last Updated : 27 Nov 2013 11:14 AM

சங்கரராமன் கொலை: ஜயேந்திரர் உள்பட 23 பேரும் விடுதலை

சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து, புதுச்சேரி நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியிட்டது.

ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரின் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

* சங்கரராமன் கொலைக்கான மூலக் காரணம் நிருபிக்கப்படவில்லை என்று தலைமை நீதிபதி முருகன் தெரிவித்தார்.

* குற்றத்துக்கான கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எதிரிகளில் அப்பு, கதிரவன் ஆகியோர் சதி திட்டம் தீட்டிய சமயத்தில் அந்த இடத்தில் இல்லை. இது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்ற கூட்டுச்சதி நிரூபிக்கப்படவில்லை.

* கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி பத்மா (அரசு தரப்பு சாட்சி 1) மகள் உமா மைத்ரேயி (அரசு தரப்பு சாட்சி 2) ஆகியோர் கொலையாளிகளை நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட முன்வரவில்லை.

* சம்பவ இடத்தில் சம்பவத்துக்கு முன்பும், பின்பும் கொலையாளிகளைப் பார்த்த சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சிகள்.

* எதிரிகள் மீதான குற்றத்தை நிரூபிக்க விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் மிக முக்கியமான 83 சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாகின. எதிரிகளுக்கு எதிராக எந்த சாட்சியமும் அளிக்கவில்லை.

* கொலையாளிகள், போலி கொலையாளிகள் ஆகியோருக்கு எதிரிகள் பணம் தந்தது தொடர்பாக விசாரிக்கப்பட்ட 10 சாட்சிகளும் பிறழ் சாட்சியங்களாயின. எதிரிகள்தான் பணம் தந்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.

* அடையாள அணிவகுப்பு நடத்திய கற்றறிந்த நீதித்துறை நடுவர்களின் சாட்சியத்துக்கு ஏற்ற விதத்தில், எந்த சாட்சிகளும் சாட்சியம் அளிக்க முன்வரவில்லை. இதனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

இறுதியில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பை, ஜயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் தரப்பு வரவேற்றுள்ளது. அதேவேளையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள சங்கரராமனின் மகன் ஆனந்த் ஷர்மா, மேல்முறையீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த வழக்கில், சங்கரராமன் குடும்பத்தினரின் பிறழ் சாட்சியமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதற்கு காரணம் என்றும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றும் அரசு தரப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கருத்து தெரிவித்தார்.

சங்கரராமன் கொலை வழக்கு பின்னணி

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரை மர்ம கும்பல் ஒன்று கோயில் அலுவலகத்திலேயே 3.9.2004 அன்று மாலை 5.45 மணிக்கு வெட்டிக் கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பியது. இதுதொடர்பாக கோயில் கணக்காளராக இருந்த கணேஷ், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மோகன்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே வழக்கின் போக்கை திசை திருப்புவதற்காக ஆறுமுகம், தில்பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண் உள்ளிட்ட 5 போலி குற்றவாளிகள் சரண் அடைந்தனர்.வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில் மாவட்ட எஸ்.பியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்ட பின் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியது.

இவ்வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், என்.சுந்தரேசன், கே.ரகு, கே.ஜி.கிருஷ்ணசாமி என்ற அப்பு, ரவி சுப்பிரமணியன் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறிவிட்டார்.

இவர்களில் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் முக்கிய குற்றவாளிகள் என போலீசார் கூறியிருந்தனர். மொத்தம் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய எஸ்.பி. பிரேம்குமார் வரதராஜபெருமாள் கோயில் மூலவர் பாதத்திலேயே குற்றப்பத்திரிகையை வைத்து காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. 370 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

அதன் பின் காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை தொடங்கவிருந்த நேரத்தில், தமிழக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது, வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும் என சங்கராச்சாரியார் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.

இதையடுத்து சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை புதுவை மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு வழக்குரைஞரும் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கதிரவன் என்பவர் சென்னையில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

கடந்த 28.10.2005-ல் இருந்து 8 ஆண்டுகளாக புதுவை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மொத்தம் 370 சாட்சிகளில் 187 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியன், சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி ஆகியோர் முக்கியமானவர்கள். சாட்சிளில் 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி, இவ்வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறி இருந்ததாவது: சங்கர மடத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவேன் என சோமசேகரகனபாடிகள் என்ற பெயரில் பல்வேறு கடிதங்கள் மூலம் சங்கரராமன் மிரட்டி வந்தார். இதனால் ஜயேந்திரர், விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர், தாதா அப்பு, அவரது உதவியாளர் கதிரவன் ஆகியோர் உதவியுடன் சங்கரராமனை கொலை செய்ய சதித்தீட்டம் தீட்டினர்.

இதன் பேரில் அப்பு, கதிரவன் ஆகியோர் ரஜினி சின்னா, அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார், அனில்குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து சங்கரராமனை தீர்த்துக் கட்ட திட்டம் வகுத்தனர். இதன்படி 3.9.2004-ல் வரதராஜபெருமாள் கோயில் வளாகத்திலேயே மேலாளர் சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் ஒவ்வொரு குற்றவாளியாக மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர். ஜயேந்திரரை ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் வைத்து போலீசார் 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். இக்கைது சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இவ்வழக்கில் 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் ஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே நாளில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை போலீசார் கைது செய்தனர்.

பல்வேறு காரணங்களால் புதுவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக கடந்த 2008-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x