Published : 31 Oct 2015 12:15 PM
Last Updated : 31 Oct 2015 12:15 PM

கோவன் கைதை கண்டித்து நவ.2-ல் ஆர்ப்பாட்டம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மக்கள் கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் நவம்பர் 2-ம் தேதி சென்னை தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சமீபகாலமாக நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவு பெற்ற மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டு வருகிற கொடுமை நிகழ்ந்து வருகிறது.

அவ்வரிசையில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி போன்ற அறிஞர் பெருமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலை குறித்து நாட்டிலுள்ள வரலாற்று ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் தங்களது விலைமதிக்க முடியாத விருதுகளை திருப்பியளித்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் படுகொலை செய்யப்படுகிற வகையில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூக அவலங்களை சித்தரித்தும் கலை இரவு நிகழ்ச்சிகள் மூலமாக கிராமிய பாணியில் தாரை தப்பட்டைகளுடன் பாடல்களை பாடி எழுச்சியை ஏற்படுத்திய மக்கள் கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த சிவதாஸ் என்கிற கோவன் தேசதுரோக குற்றம் இழைத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பாவலர் வரதராஜன் எப்படி பாடி நாட்டு மக்களை ஈர்த்தாரோ, அதற்கு சற்றும் குறையாமல் மக்கள் உணர்ச்சிகளை தூண்டுகிற வகையில் பொது பிரச்சினைகளை முன்வைத்து பாடல்களை இயற்றி, அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே பேரெழுச்சி ஏற்படுத்தியதை சகிக்க முடியாதவர்கள் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிலே தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதை உறுதி செய்கிற வகையில்தான் கிராமிய பாடகர் கோவன் கைது நிகழ்ந்துள்ளது.

இதை உடனடியாக தடுத்து நிறுத்த கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிற வகையில் வருகிற 2.11.2015 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x