Published : 29 Sep 2015 12:29 PM
Last Updated : 29 Sep 2015 12:29 PM

கொல்லிமலை முகட்டில் இருந்து செல்பி எடுத்த மாணவர் பலி

கொல்லிமலை முகட்டில் இருந்து 'செல்பி' எடுத்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து இறந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்பக்காரன்நல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் பிரகாஷ் (18). இவர் நாமக்கல் அருகே எருமபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை பிரகாஷ் சக மாணவர்களுடன் பண்ணைக்காரன்பட்டி வழியாக கொல்லிமலைக்கு ஒற்றையடி பாதையில் ஏறினார். அங்குள்ள மலை முகட்டில் நின்று 'செல்பி' எடுத்துக் கொண்டு இருந்தபோது, பிரகாஷ் திடீரென கால் வழுக்கி, பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இச்சம்பவம் நடந்ததால் மழை பெய்ததாலும் இரவு நேரம் என்பதாலும் போலீஸாரால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை எருமப்பட்டி மற்றும் வாழவந்திநாடு போலீஸார் பள்ளத்தில் கிடந்த பிரகாஷின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வாழவந்திநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x