Published : 14 Feb 2017 12:50 PM
Last Updated : 14 Feb 2017 12:50 PM

குமாரசாமி தீர்ப்பை புறந்தள்ள வித்திட்ட அப்பீலின் 10 அம்சங்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுவித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு மனு மீதான பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், கர்நாடக அரசு தங்கள் மனுவில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்ட 10 முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

1. 1,66,839.60 சதுர. அடி பரப்பளவு கட்டிடங்களின் மதிப்பீடு:

பொதுப்பணித்துறை மதிப்பீட்டுக்குப் பிறகும் 20% கழிவும் போக விசாரணை நீதிமன்றம் கட்டிடங்களின் மதிப்பை ரூ.22,53,92,344 (22.53 கோடி) என்று நிர்ணயித்தது.

உயர் நீதிமன்றம் தனது மறுமதிப்பீட்டில் கட்டிடங்களின் கட்டுமான செலவாக ரூ.5,10,54060 என்ற தொகையை வந்தடைந்தது.

உயர் நீதிமன்றம் வந்தடைந்த கட்டிட மதிப்பான ரூ.5.10 கோடி என்பது குற்றம்சாட்டப்பட்டவர்களே ஒப்புக் கொண்ட தொகையான ரூ.8,60,59,261 என்பதை விடவும் குறைவாக கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. வளர்ப்பு மகன் வி.சுதாகரன் திருமண செலவு:

அரசு தரப்பு கணக்கிட்ட செலவுத் தொகை: ரூ.6,45,04,222

விசாரணை நீதிமன்றம் கணக்கிட்ட செலவு: ரூ.3,00,00,000

இதனை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை வைத்து மிகவும் குறைவாக ரூ.28.68 லட்சம் என்று நிர்ணயித்தது.

3. கடன் தொகையே வருமானமாக:

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பை தீர்மானித்ததில் மிகப்பெரிய பலவீனம் என்னவெனில் கடன்களை வருமானமாக கணக்கிட்டதுதான் என்று கர்நாடக அரசு தன் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டது.

ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஆணையம் குற்றம்சாட்டப்பட்டவர் வாங்கிய கடன் தொகை ரூ.5,99,85,274 என்று கண்டுபிடித்தது.

ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஆணையத்தின் இந்த கடன் தொகையை ஏற்று கொண்டது, ஆனால் தேசியவங்கிகளிலிருந்து வாங்கப்பட்ட 10 கடன்களின் மீதான தொகை ரூ.24,17,31,274 என்பதை உயர்நீதிமன்றம் புறக்கணித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ள கணக்கீட்டுப் பிழையை கர்நாடக அரசு அம்பலப்படுத்தியது. அதாவது 10 கடன்களின் மீதான தொகை ரூ.10.67 கோடியே என்று உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது, மாறாக ரூ.24.17 கோடி என்று கர்நாடக அரசு முன்வைத்தது.

4. வருவாயை மீறிய சொத்துக் குவிப்பு 76.7% ஆகும், 8.12% அல்ல:

கர்நாடக அரசு தன் மனுவில் மொத்த சொத்துக்களாக கணக்கிட்டு முன்வைத்த தொகை: ரூ.37,59,02,466, இதனை மொத்த வருவாயான ரூ.21,26,65,654 என்ற தொகையை கழித்து விட்டால் ரூ.16,32,36,812 கூடுதல் சொத்து உள்ளது என்று குறிப்பிட்டது.

கர்நாடக அரசு 76.7% வருவாயை மீறிய சொத்து என்று கணக்கிட்டது எப்படியெனில், ரூ.16,32,36,812 (வருவாய்க்கு அதிகமான சொத்துகள்) என்ற தொகையை 100-ஆல் பெருக்கி வரும் தொகையை ரூ.21,26,65,654 (மொத்த வருமானம்)-ஆல் வகுத்தால் 76.7% என்று கர்நாடக அரசு கணக்கிட்டது.

5. திராட்சைத் தோட்ட வருவாய்:

ஐதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டத்திலிருந்து பெற்ற வருவாயாக அரசு தரப்பு கணக்கிட்ட தொகை: ரூ.5,78,340.

ஜெயலலிதா தனது சொத்திலிருந்து பெற்ற வருவாயாகக் காட்டியது: ரூ.52,50,000

விசாரணை நீதிமன்றம் வருவாயை ரூ.10,00,000 ஆக கணக்கிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பில் வருவாய்: ரூ.46,71,600 என்று குறிப்பிடப்பட்டது.

6. பரிசுகளே வருமானமாக:

ஜெயலலிதா தனது 44-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெற்ற பரிசுத் தொகை ரூ.1.5 கோடியை ‘சட்டபூர்வமான வருவாய்’ என்று உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது.

இதனை கர்நாடகா அரசு எதிர்க்கும் போது, இந்த வருவாய் குறித்த சிபிஐ வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது, இந்த விவரத்தை குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு உயர் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவர தவறியது.

சட்டபூர்வ வருவாயிலிருந்து பரிசுத்தொகை பெற்றாரென்றால் அதனை ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு இந்த வருவாய் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

7. சசி எண்டர்பிரைசஸ் வருமானம்:

சசி எண்டர்பிரைசஸுக்கு வாடகை வருமானம் ரூ.12,60,800 என்றும், அரசு தரப்பு ரூ.6,15,900 என்று எடுத்துக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டவர் செய்திருந்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆனால் உயர் நீதிமன்றமோ ’பூடகமான’ ரூ.25,00,000 வாடகை வருமானம் என்று ‘ஊகத்தின் அடிப்படையில்’ எடுத்து கொண்டதாக கர்நாடக அரசின் மனு சுட்டிக்காட்டியது.

8. ஜெயா பப்ளிகேஷன் வருமானம் மற்றும் நமது எம்ஜிஆர் விவகாரம்:

ஜெயா பப்ளிகேஷன் வருமானம் ரூ.1.15 கோடி என்பதை உயர் நீதிமன்றம் தவறாக ரூ.4 கோடி என்று எடுத்து கொண்டது, அதாவது மொத்த விற்பனையை தவறாக நிகர லாபம் என்பதாக எடுத்துக் கொண்டதாக கர்நாடக அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

நமது எம்ஜிஆர் குறித்த விசாரணை நீதிமன்றத்தின் ஆதாரம் ‘தவறானது’ ‘ஜோடிக்கப்பட்டது’ என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது.

9. சூப்பர்டூப்பர் டிவி பிரைவேட் லிட். வருமானம்:

குற்றம்சாட்டப்பட்ட 3-ம் நபர், மற்றும் நிறுவன உரிமையாளரான வி.என்.சுதாகரன் நிறுவனம் சட்டபூர்வமாக ஈட்டிய வருமானம் ரூ.1.10 கோடி என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் விசாரணை நீதிமன்றம் இதனை நிராகரித்தது. விசாரணை நீதிமன்றத்தின் இந்த நிராகரிப்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

10. சொத்துக்கள்:

146 அசையா சொத்துகளின் விற்பனை, ரியல் எஸ்டேட் விற்பனைத் தொகை ரூ.20 கோடி என்று விசாரணை நீதிமன்றம் பதிவு செய்தது.

ஆனால் உயர் நீதிமன்றம் தேவையில்லாமல், காரணமில்லாமல் 146 அசையாச் சொத்துகள் விற்பனையில் 49 சொத்துகள் விற்பனையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விற்பனையில் கிடைத்த தொகையாக, ரூ.6,24,09,120 என்று நிர்ணயித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x