Published : 11 Jul 2014 09:00 AM
Last Updated : 11 Jul 2014 09:00 AM

குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக தனியாக இல்லம்- செயல்வடிவம் கொடுக்கிறார் செல்வகோமதி

‘‘சட்டம் படித்து முடிந்ததும், கோர்ட்டுக்குப் போய் வாதாடுவதா, இல்லை... சமுதாயப் பணிக்குப் போவதா என்று எனக்குள்ளே ஒரு மனக் குழப்பம் இருந்தது. செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக அடைத்து வைத்திருந்த 32 பேரை மீட்டபோது அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம், என்னை சமுதாயப் பணியே சரி என முடிவெடிக்க வைத்துவிட்டது’’ சிரித்தபடி சொன்னார் வழக்கறிஞர் செல்வகோமதி.

மதுரையைச் சேர்ந்த செல்வ கோமதி ஒடுக்கப்பட்டோர் உரிமை களுக்காக குரல் கொடுக்கும் ‘சோக்கோ’ அறக்கட்டளையின் துணை இயக்குநர். கடந்த 18 வருடங்களில் தமிழகத்தில் மட்டு மில்லாமல் ஆந்திரம், குஜராத், உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டிப் போடப் பட்டிருந்த நூற்றுக்கணக்கான கொத்தடிமைத் தொழிலாளர்களின் அடிமை விலங்கை தகர்த்து எறிந்தவர் செல்வகோமதி.

இதேபோல், திருமணமாகாத இளம் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் பஞ்சாலைகளின் சுமங்கலி திட்டம் குறித்தும் தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். தனது பணிகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் செல்வகோமதி.

‘‘இளையான்குடி அருகே திரு வேடகத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைத்திருந்த 32 தொழிலாளர்களை போராடி மீட்டபோதுதான் சட்டம் படித்ததின் அர்த்தம் புரிந்தது. கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையும் பெற்றுக் கொடுத்தோம்.

சுமங்கலி திட்டமும் நவீன கொத்தடிமைத் தனம்தான் என்பதை விளக்க உலகத் தொழிலாளர் நிறுவனத் துடன் இணைந்து 30 மாவட்டங் களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டோம். இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணை யத்துக்கு எங்கள் அமைப்பிலிருந்து புகார் எழுதினோம்.

இது தொடர்பான ஒரு பொதுநல வழக்கில் 17 மாவட்டங்களில் சுமங்கலித் திட்டம் குறித்து அறிக்கை அளிக்க ஆட்சியர்கள் தலைமையில் குழுக்களை அமைக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அந்தக் குழுவில் நானும் ஒரு உறுப்பினர்.

சுமங்கலித் திட்டம் குறித்து மற்றவர்களின் பார்வையிலிருந்து மாறுபட்ட அறிக்கை ஒன்றை நான் கோர்ட்டுக்குக் கொடுத்தேன். அந்த அறிக்கைக்குப் பிறகுதான், சுமங்கலித் திட்டத்தில் பணி செய்யும் பெண்களுக்கு உரிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அவர்கள் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழும் கொண்டு வரப்பட்டார்கள்.

இவை ஒரு புறமிருக்க.. பெண் களுக்கு எதிரான குடும்ப வன்முறை களை தடுப்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை தென் மாவட்ட கல்லூரி மாணவிகள் மத்தியில் மேற்கொண்டு வருகி றோம்.

குடும்ப வன்முறைகள் குறித்து கடந்த ஆண்டு அமெரிக் காவில் 21 நாட்கள் கருத்தரங்கங்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. அதில் இந்தியா சார்பில் நான் கலந்துகொண்டேன். அமெரிக் காவிலும் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன. ஆனால், அங்கே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப் படும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிறது.

குடும்ப வன்முறைக்கு ஆளான ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியேறி னால் அவருக்கு அடைக்கலம் கொடுக்க காப்பகங்கள், மருத்துவ மனைகள், சட்ட உதவி மையங்கள் இவை அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கின்றன. அதே மாதிரியான ஒரு அமைப்பை இங்கேயும் மாவட்டந்தோறும் ஏற்படுத்த வேண்டும். எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பார்கள்.

குடும்ப வன்முறை குறித்து எங்களுக்கு நிறைய புகார்கள் வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதலில் மன தைரியத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சனிக்கிழமைதோறும் கவுன்சலிங்கும் சட்ட ஆலோசனை களும் வழங்குகிறோம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக தனியான இல்லம் ஒன்றை அமைக்கும் திட்டத்தில் இருக்கிறேன்.

சட்டப் போராட்டம் முடியும்வரை அவர்கள் அந்த இல்லத்திலேயே தங்கி இருக்கலாம். அவர்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி அதன்மூலம் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்க வைக்கலாம்’’ என்று சொன்னார் செல்வ கோமதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x