Published : 18 Feb 2017 10:24 AM
Last Updated : 18 Feb 2017 10:24 AM

குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணித்தேன்: எம்எல்ஏ அருண்குமார்

அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் தான் வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) காலை கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுகவை உருவாக்கி வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என யாரும் கட்சியில் குடும்பத்தை புகுத்தவில்லை. ஆனால், தற்போது அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் மிகுந்துள்ளது. அதனால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கிறேன்.

எனக்கு பதவி, புகழ், பணம் ஏதும் முக்கியமில்லை. கட்சி மட்டும்தான் முக்கியம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இன்று, மக்களின் விருப்பப்படி நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இந்த முடிவால் அணி மாறுகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவில் அணிகளுக்கு இடமில்லை.

எடப்பாடி பழனிசாமி முதல்வரானதை நான் எதிர்க்கவில்லை ஆனால் கட்சியில் ஒரு குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்கும் தலைமையின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்திருக்கிறேன்.

கூவத்தூரில் தங்கியிருந்தபோது எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எவ்வித துன்புறுத்தலும் செய்யப்படவில்லை. அப்படி கட்டுப்பாடு இருந்திருந்தால் நான் எப்படி அங்கிருந்து கிளம்பி எனது சொந்த ஊர் வரைக்கும் வந்திருக்க முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x