Published : 30 Nov 2016 05:59 PM
Last Updated : 30 Nov 2016 05:59 PM
வட இந்திய சமுத்திர படுகையில் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதற்கு 'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ளது (ஓமன் நாடு இந்தப் பெயரை வழங்கியுள்ளது). காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றதை அடுத்து இந்திய வானிலை மையம் அதைப் புயலாக அறிவித்திருக்கிறது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்கும் புயலுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இல்லை என்றே கூறலாம். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நாடா' புயல் தமிழகத்தில் டிசம்பர் 2-ம் தேதியன்று நாகப்பட்டினம் - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும்.
புயல் மிக வலுவாக இருப்பதாலும், அது அதன் திசையில் நேர்த்தியாக நகர்ந்து வருவதாலும் 'நாடா' திசை மாற வாய்ப்பில்லை. அதேவேளையில், காற்று வகைக்கெழு காரணமாக புயல் கரையை நெருங்கும்போது வலுவிழக்க வாய்ப்புள்ளது.
டிசம்பர் 1-ம் தேதி புதுக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில், கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. டெல்டா மாவட்டங்களிலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி காலையில் நல்ல மழை பெய்யும். அதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே மிதமான அளவில் மழை பெய்யும்.
டிசம்பர் 2, 3, 4 தேதிகளில்- நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக குன்னூர் பகுதியில் கனமழை பெய்யும். தென்கோடி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை. ஆங்காங்கே குறைந்த அளவில் மழை பெய்யலாம்.மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது.
டிசம்பர் 1-ம் தேதி இரவு மற்றும் டிசம்பர் 2-ம் தேதி காலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60-ல் இருந்து 70 கி.மீ வேகத்துடன் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT