Published : 20 Dec 2013 03:27 PM
Last Updated : 20 Dec 2013 03:27 PM

கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கான ஒப்புதல் ரத்து

மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்துக் கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரைகள் மீதான ஒப்புதலை ரத்து செய்வதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க கஸ்தூரிரங்கன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

மத்திய அரசுக்கு, இக்குழு கொடுத்த அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

அங்குள்ள மணல் குவாரிகள், சுரங்க பணிகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

20 ஆயிரம் சதுர கி.மீ. அல்லது அதற்கு மேல் கட்டுமானம் எழுப்பக்கூடாது.

50 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் குடியிருப்பு உருவாக்கக் கூடாது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பை முன்னிறுத்தி அது செல்லும் பகுதிகளில் ரசாயன, பூச்சிக்கொல்லி தயாரிப்பு, சிமென்ட், அனல்மின் நிலையக் கூடங்கள் அமைக்கக் கூடாது என நீண்ட பட்டியலை அளித்திருந்தது.

இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை அமல்படுத்தினால் 30 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 11 மாவட்டங்களில் 123 ஊராட்சிகளில் வாழும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களைப் பஞ்சாயத்து வாரியாகக் குழு அமைத்து அவர்களின் வாழ்வியல் சூழலைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதன் பின்தான் அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்யவில்லை என எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்,கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரைகள் மீதான ஒப்புதலை ரத்து செய்வதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x