Last Updated : 09 Jun, 2014 10:48 AM

 

Published : 09 Jun 2014 10:48 AM
Last Updated : 09 Jun 2014 10:48 AM

கணவர் நினைவாக நூலக மகால்: மக்களுக்காக சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மூதாட்டி

தனது காதலி நினைவாக தாஜ் மகாலை ஷாஜஹான் கட்டினார் என்பது வரலாறு. ஆனால், வரலாற்றின் வள்ளல் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டுமென்றோ, மற்றவர்கள் பாராட்ட வேண்டு மென்றோ எண்ணாமல் தனது கணவரின் ஆசையை நிறை வேற்றும் வகையில் அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற வகையில் தனது சொந்த இடத்தில்- சொந்தப் பணத்தில் நூலகம் கட்டிக் கொடுத் துள்ளார் மூதாட்டி சரோஜினிதேவி.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள குக்கிராமம் புனல்வேலி. நெசவா ளர்களும் தொழிலாளர்களும் நிறைந்த இந்த ஊரில் பொது நூலகம் இல்லை. இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறிப்பாக, நூல் வாசிப்பு ஆர்வமிக்கவர்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பெரும் குறையாகவே இருந்து வந்தது.

இதை உணர்ந்து, இந்த ஊரைச் சேர்ந்தவரும்- ராஜபாளை யம் ராஜூக்கள் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரி யராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற த.மாரிமுத்து, தான் பிறந்த புனல்வேலியில் நூலகம் திறக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டார். ஆனால், விதி வலியது என்பதை நிரூபிக்கும் வகையில், நூலகம் அமைக்க அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது உடல் நலன் பாதிக்கப்பட்டு கடந்த 26.6.2013 அன்று மரணமடைந்தார். இதனால், புனல்வேலியில் நூலகம் அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

கணவரின் லட்சியம்

கணவர் இறந்ததால் மன முடைந்து வீட்டுக்குள் ஓரத்தில் முடங்கிக் கிடக்காமல், கணவரின் லட்சியத்தை நிறைவேற்ற உத்வே கத்துடன் செயல்படத் தொடங் கினார் மாரிமுத்துவின் மனைவி சரோஜினிதேவி. நூலகம் கட்டுவதற் காக கணவர் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுத்தபோது ஊரில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனால், அவை எல்லா வற்றையும் தனி நபராக எதிர்த்துப் போராடிய சரோஜினிதேவி, தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் சொந்த காலி இடத்தில் ரூ. 5 லட்சம் செலவில் நூலகக் கட்டிடம் கட்ட முடிவு செய்தார்.

முடிவு செய்ததுடன் நின்றுவிடா மல் தொடர் முயற்சி செய்து ரூ. 12 லட்சத்தில் நூலகக் கட்டிடத்தை கட்டி முடித்த சரோஜினிதேவி, அதை தமிழக அரசின் நூலகத் துறைக்கு தானமாக அளித்து பத்திரப்பதிவும் செய்து கொடுத்தார்.

தவிர, அரசு விதிமுறைகளின்படி 500 நூலக உறுப்பினர்களுக்கான தொகை ரூ. 10 ஆயிரம், புரவலர்கள் தொகையாக ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை செலுத்தியதோடு, வீட்டிலிருந்த ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான நூல்களை அந்த நூலகத்துக்கு அளித்ததுடன், ரூ. 10 ஆயிரம் மதிப்பில் தளவாடப் பொருள்களையும் நூலகத்துக்கு வாங்கிக் கொடுத்தார்.

இதன்மூலம், தனது கணவரின் லட்சியத்தை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில், நூலகம் கட்டிக் கொடுத்ததற்கான அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் ஒப்படைத்தார் சரோஜினிதேவி.

ரூ.3 லட்சத்தில் வகுப்பறை

இதுகுறித்து சரோஜினிதேவி கூறியது:

‘எனது கணவர் இதே ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வந்தவர். தன்னைப்போல மற்றவர்களும் கல்வி அறிவு பெறச்செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதற்காக, கிராமத்தில் நூலகம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பே ஊரில் உள்ள ஆரம்பப்பள்ளிக்கு ரூ. 3 லட்சத்தில் வகுப்பறைக் கட்டிடம் கட்டிக்கொடுத்தார்.

எங்களுக்கு குழந்தை இல்லை. ஆனாலும், இளம்தலைமுறை யினரின் அறிவுப் பசியைத் தீர்க்க நூலகம் அமைப்பதை எனது கணவர் லட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் திடீரென இறந்ததால், அவர் விட்டுச்சென்ற பணிகளை நான் எடுத்து நிறைவேற்றி முடித்தேன்.

எனது கணவரின் முதலாமாண்டு நினைவு நாளான வருகிற 26-ம் தேதிக்குள் நூலகத்தைத் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலங்கிய கண்களோடும், கணவரின் நினைவுகளோடும் கூறினார் சரோஜினிதேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x