Last Updated : 09 Apr, 2016 08:22 PM

 

Published : 09 Apr 2016 08:22 PM
Last Updated : 09 Apr 2016 08:22 PM

கட்சித் தலைமைக்கு புகார்கள் குவிந்ததால் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்

அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் ராதாபுரம் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது இத் தொகுதிக்கு வேட்பாளராக சென்னையில் வசிக்கும் உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வாக மைக்கேல் ராயப்பன் உள்ளார். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணியில் இருந்த அவர், சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அதையடுத்து இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார்.

அதேபோல், ராதாபுரம் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், திசையன்விளை பேரூராட்சித் தலைவர் ஏ.கே. சீனிவாசன், தொகுதி அதிமுக செயலாளர் பால்துரை, பணகுடி பேரூராட்சித் தலைவர் ஜி.டி. லாரன்ஸ் உட்பட பலர் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.

பறிபோன மகிழ்ச்சி

அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது ராதாபுரம் தொகுதி வேட்பாள ராக ஜி.டி.லாரன்ஸ் அறிவிக்கப் பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்து தேர்தல் பணிகளை தொடங்கியிருந்தனர். இந்நிலையில், இந்த தொகுதியின் வேட்பாளராக தற்போது ஐ.எஸ்.இன்பதுரை (54) அறிவிக்கப்பட்டுள்ளார். திடீரென புதிய வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்திருப்பது, லாரன்ஸுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு வழக்கறிஞர்

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியைச் சேர்ந்தவர் ஐ.எஸ்.இன்பதுரை. தற்போது சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதிமுக மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி பிரிசில்லா செல்வமாதா. மகள் டிமோனா சென்னையில் படித்து வருகிறார்.

மாற்றம் ஏன்?

வேட்பாளர் மாற்றம் தொடர்பான பின்னணி குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, லாரன்ஸ் மீது உள்ளூர் கட்சி நிர்வாகிகள் பலர், கட்சி தலைமைக்கு பக்கம் பக்கமாய் புகார்களை அனுப்பியிருக்கிறார்கள். குறிப்பாக இத் தொகுதியில் சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள் தரப்பிலிருந்துதான் அதிக அளவில் புகார்கள் சென்றிருக்கின்றன. லாரன்ஸ் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர், அவர் மக்கள் பணிகளை சரிவர செய்யவில்லை என்பதுதான் பிரதானமான குற்றச்சாட்டாக இந்த மனுக்களில் இருந்துள்ளது. இந்த பின்னணியில்தான் அவரை மாற்றி புதிய வேட்பாளரை அதிமுக தலைமை அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x