Published : 09 Feb 2017 10:45 AM
Last Updated : 09 Feb 2017 10:45 AM
அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக் கள் ஒவ்வொருவராக தற்போது ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருவதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வரை பன்னீர் செல்வத்தையும் சேர்த்து அவரது அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற 232 தொகுதிகளுக்கான தேர்தலில் 134 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. இதில், 131 பேர் அதிமுக வேட்பாளர்கள்; மற்ற மூவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத் தில் போட்டியிட்டவர்கள். இதில், மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சீனிவேலு மரணமடைந் தார். இதையடுத்து, அதிமுகவின் பலம் 133 ஆக குறைந்தது.
அதன்பின் கடந்தாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் காலியாக இருந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தொகுதிகளையும் ஆளும் அதிமுக கைப்பற்றியது. இதனால் அதிமுகவின் பலம் 136 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதால், அதிமுகவின் பலம் 135 ஆக குறைந்தது.
இதில் பி.தனபால் பேரவைத் தலைவராக இருப்பதால் கட்சியில் எழும் பிரச்சினைகளுக்கு வாக்களிக்க இயலாது. எனவே, அவர் எண்ணிக்கையில் வர மாட்டார். இதனடிப்படையில், அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 134 எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது ஓபிஎஸ் வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு கே.மாணிக்கம் (சோழவந்தான்), வி.சி. ஆறுகுட்டி (கவுண்டம்பாளையம்), மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங் கரை), ஏ. மனோகரன் (வாசுதேவ நல்லூர்), எஸ்.பி.சண்முகநாதன் (வைகுண்டம்) ஆகிய 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பதவியேற்பதில் சிக்கல்
இதன் காரணமாக சசிகலாவுக்கான ஆதரவு குறைந்து வருகிறது. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 117 எம்எல்ஏக்கள் தேவை. இந்நிலையில் இன்னும் 20 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தாலும் கூட, சசிகலா பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டு விடும். இதை தவிர்க்கவே, இருக்கும் எம்எல்ஏக்களை தக்கவைக்க சசிகலா தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT