Published : 01 Jun 2016 10:39 AM
Last Updated : 01 Jun 2016 10:39 AM

ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவத் தயார்: ஏற்றம் தரும் ‘மாற்றம் ஃபவுண்டேஷன்’

கடந்த மூன்றாண்டுகளில் உயர் கல்விக்கு வழி தெரியாமல் நின்ற ஏழை மாணவர்கள் 212 பேரை எவ்வித கட்டணமும் இல்லாமல் உயர்கல்வி படிக்க வைத்திருக்கிறது ’மாற்றம் ஃபவுண்டேஷன்’.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மனித ஆற்றல் பிரிவின் (ஹெச்.ஆர்.) சென்னைக்கான தலைவர் ஜெ.சுஜித்குமார். மாணவர்களுக்கான கல்வி ஆலோ சனை (கேரியர் கவுன்சலிங்) வகுப்புகளை நடத்தும் சுஜித் குமார், மூன்றாண்டுகளுக்கு முன்பு மதுரையில் அப்படியொரு வகுப்பில் கலந்துகொண்ட போது, வீட்டு வேலைக்குச் சென்று கொண்டே படித்து 12-ம் வகுப்பில் 1,134 மதிப்பெண் எடுத்திருந்த ஒரு மாணவியை சந்தித்தார். அந்த மாணவிதான் ‘மாற்றத்துக்கான’ வித்து.

‘‘அந்த மாணவிக்கு தாய் இல்லை. தகப்பன் குடி நோயாளி. இந்த சுமைகளை எல்லாம் கடந்து சாதித்த அந்த மாணவியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. சென்னைக்கு வந்ததும், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியின் தலைவரைச் சந்தித்து, அந்த மாணவியின் பரிதாப நிலையை எடுத்துச் சொல்லி, ‘அவருக்காக ஒரே ஒரு சீட் கொடுங்கள். அதற்கு பதிலாக உங்கள் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கு நான் இலவசமாகவே வளாகத் தேர்வு பயிற்சி அளிக்கிறேன்’ என்று சொன்னேன்.

அதற்கு அவர், ‘ஒன்றென்ன.. இதுபோல இயலாமையில் உள்ள மாணவர்கள் 20 பேருக்கு அட் மிஷன் தருகிறேன். 4 ஆண்டுகளுக்கும் அவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டாம்’ என்றார். நாங்கள் பூரித்துப்போனோம்’’ என்கிறார் சுஜித்குமார்.

உடனேயே இந்தத் தகவலை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தனது நண்பர் ஆர்.ஜே.பாலாஜி மூலமாக பண்பலையிலும் பரப்பி இருக்கிறார் சுஜித். இதற்காக, தான், தனது நண்பர்கள் 9 பேரை அங்கத்தினர்களாகக் கொண்ட ‘மாற்றம் ஃபவுண்டேஷனை’ உருவாக்கி இருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட 10 பேர் மாற்றத்தின் ஆலோசகர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

முதலாம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 20 பேரும் இப் போது நான்காம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இல்லாமல் இரண்டாண்டு ஹெச்.ஆர். படிப்பை படித்து முடித்த ஒரு மாணவி இம்மாதம், முதல் சம்பளம் வாங்கிவிட்டார்.

‘‘இலவசம் என்றதுமே மாடி வீட்டுக்காரர்கள் கூட ஓடி வருகிறார்கள். பக்கத்து சந்தில் காரை நிறுத்தி வைத்துவிட்டு எங்களது நேர்காணலுக்கு வருகிறார்கள். ‘இதுவரை நாங்கள் சம்பாதித்த பணத்தை மகளின் கல்யாணத்துக் காக சேர்த்து வைத்திருக்கிறோம். நீங்கள் இலவசமாக சீட் வாங்கிக் கொடுத்தால் படிப்பு முடிந்ததும் கல்யாணத்தை முடித்துவிடுவோம்’ என்று கேட்கிறார்கள்.

கடந்த ஆண்டு, சத்தியபாமா கல்லூரி மட்டுமே எங்களுக்கு 30 சீட்களை இலவசமாக தந்தது. இதுபோல் தமிழகம் முழுவதும் 24 கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 90 சதவீதம் பொறியியல் கல்லூரிகள்தான்.

தகுதியான மாணவர்கள் எத் தனை பேர் வந்தாலும் அவர்களது உயர் கல்விக்கு எங்களால் வழி காட்ட முடியும். ஆனால், தகுதி யான மாணவர்களை தேர்வு செய்வது தான் சவாலாய் இருக்கிறது. பொறியியல் படிப் பில் சேர விரும்பும் மாணவர் கள் கட்ஆஃப் மதிப்பெண் 175 வைத்திருக்க வேண்டும்.

ஆதரவற்ற குழந்தைக ளுக்கும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கும் முன்னு ரிமை அளிக்கிறோம். தகுதியான நபர்கள் தங்களது விவரங் களை எங்களுக்கு MAATRAM FOUNDATION@YAHOO.CO.IN என்ற மெயிலில் அனுப்பினால் அதன் உண்மைத் தன்மையை ஒன்றுக்கு இரண்டுமுறை சரி பார்த்து மாணவர்களை தேர்வு செய்து கல்லூரியில் சேர்த்து விடுவோம்.

அடுத்த கட்டமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் 4 பேரை பள்ளியில் சேர்த்திருக்கிறோம். அவர்களுக்கான படிப்புச் செலவை கவனித்துக் கொள்வ தற்காக எங்களது நண்பர்கள் 4 பேரை கொடையாளர்க ளாகவும் இணைத்திருக்கிறோம். உதவி செய்வதற்கு பணம் ஒரு விஷயமில்லை.

உதவி செய்யவும் அதைப் பெற்றுக்கொள்ளவும் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் நாங்கள் நல்லதொரு உறவுப் பாலமாக இருக்கி றோம்’’ என்று நம்பிக்கை தருகிறார் சுஜித்குமார்.

தகவலுக்கு: 9551014389.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x