Published : 17 Feb 2017 08:02 PM
Last Updated : 17 Feb 2017 08:02 PM

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுகவின் 89 உறுப்பினர்களும் வாக்களிக்க முடிவு: ஸ்டாலின்

சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு செய்துள்ளது.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமிநேற்று முன்தினம் பொறுப் பெற்றார். அவர் சட்டப்பேரவை யில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருந்தார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வுள்ளது.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் திமுகவுக்கு 89 எம்எல்ஏக்கள் உள்ளனர்.சென்னையில் நேற்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சி யின் செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலை வருமான மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

ஆளுநரின் உத்தரவுப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை யில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருக்கிறார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, மக்களின் வாழ்வுரிமைகள் அனைத்தும் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, அதிமுக ஆட்சிக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுகவின் 89 உறுப்பினர்களும் வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண் டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள் ளது. அதுபோன்ற நிலை வந்தால் அதனை திமுக வரவேற்கும்.

எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் கூவத்தூர் தனியார் விடுதியில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி விடுவார்கள் என சசிகலா தரப்பில் கூறி வந்தனர். ஆனால், இப்போதும் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எப்படி பட்டாசு வெடித்து கொண்டாடி னார்களோ, அதுபோல சசிகலா சிறைக்குச் சென்றதை எம்எல்ஏக்கள் கூவத்தூர் விடுதியில் கொண்டாடி வருகிறார்கள் என நினைக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அனைத்து திமுக எம்எல்ஏக்களும் தவறாமல் ஆஜராக வேண்டும் என அக்கட்சியின் கொறடா அர.சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x