Published : 03 Jul 2014 09:09 AM
Last Updated : 03 Jul 2014 09:09 AM
உயிர் பிழைப்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று கட்டிட விபத்தில் உயிர் தப்பியவர்கள் கூறினர்.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 49 பேர் சடல மாகவும், 27 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட 26 பேர் போரூர் ராமச் சந்திரா மருத்துவமனையிலும், ஒரு பெண் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமச்சந்திரா மருத்துவ மனை யில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கட்டிட விபத்து பற்றி கூறியதாவது:
மீனம்மாள் (35):
கட்டிடம் இடிந்த பிறகு, என்னைச் சுற்றி கட்டிடத்தின் கற்கள்தான் இருந்தது. அந்த காட்சியை ஒவ்வொரு முறை நினைத்துப் பார்க்கும்போதும் என்னை பயம் சூழ்ந்து கொள்கிறது.
அனுசூர்யா (35):
என்னுடன் கட்டிட இடிபாடுகளில் இன்னும் இரண்டு பேர் சிக்கி இருந்தனர். அதில், ஒரு பெண் இறந்துவிட்டார்.
லட்சுமி (40):
நான் மருத்துவமனையில் இருக்கிறேன். என்னுடைய கணவரும், மகளும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.
செந்தில் (30):
நான் சென்னைக்கு முதல் முறையாக வேலைக்கு வருகி றேன். இதற்கு முன்பு மதுரை, திருச்சி மற்றும் கேரளாவில் வேலை பார்த்து இருக்கிறேன். இனிமேல் சென்னைக்கு வரவே மாட்டேன்.
பாண்டியராஜன் (27):
நான் 11வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தேன். எனக்கு நினைவு திரும்பிய போது, மருத்துவமனையில் இருக்கிறேன். என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
பிரபு (22):
நான் 5 வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது பெரிய சத்தம் கேட்டது. என்னை காப்பாற்றும் வரையில், நான் உள்ளேயே இருந்தேன். நான் உயிர் பிழைப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT