Published : 05 Oct 2015 09:23 AM
Last Updated : 05 Oct 2015 09:23 AM
உதவி பேராசிரியர் பணிக்கான “நெட்” தகுதித் தேர்வுக்கு நவம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலக்கியம், வரலாறு, புவியியல், சமூகவியல், பொது நிர்வாகம், உளவியல் உள்ளிட்ட கலைப்பிரிவு சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் “நெட்” தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட முதலாவது ‘நெட்’ தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தேர்வு டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் கிடையாது. எனினும், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் எனப்படும் ஜெஆர்எப் உதவித்தொகை தகுதிக்கு மட்டுமே வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுள்ளவர்கள் நவம்பர் 1-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cbsenet.nic.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT