Published : 14 Mar 2016 11:10 AM
Last Updated : 14 Mar 2016 11:10 AM

உடுமலையில் காதல் திருமண தம்பதிக்கு வெட்டு: பொறியியல் மாணவர் பலி

காதலித்து திருமணம் செய்தவர்களை உடுமலையில் பட்டப்பகலில் கூலிப்படையினர் வெட்டியதில் பொறியியல் மாணவரான காதலன் இறந்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(21). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர், பழநியைச் சேர்ந்த சின்னராஜின் மகளை காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் குமரலிங்கத்தில் வசித்து வருகின்றனர். சின்னராஜின் மகள் தனியார் கடையில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் இருவரும் உடுமலைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பொதுஇடத்தில் சரமாரியாக வெட்டியது.

இதில் மாணவருக்கு கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற பெண்ணுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. இதற்கிடையே பொதுமக்கள் கூடியதால் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் இருவரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக்கு எடுத்து செல்லும் வழியில் சங்கர் இறந்தார்.

இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

’பெண்ணின் உறவினரே திட்டம்’

கொலைக்கு பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரே திட்டம் தீட்டியது போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். வாகனத்தில் தப்பிச் சென்ற மூவரையும் விரைவில் பிடிப்போம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

6 தனிப்படை:

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x