Published : 08 Jun 2014 04:10 PM
Last Updated : 08 Jun 2014 04:10 PM

இலங்கை கடற்படை அத்துமீறலை கடுமையாக கண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 82 மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

கடந்த ஜூன் 1-ம் தேதி நான் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, தாங்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 33 மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை கடற்படையினரின் அடாவடிப் போக்கினால் பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமை பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும், அவர்களது பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்தும் கடந்த 3-ம் தேதி தங்களிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தேன்.

எனினும், இந்த நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட இன்னும் காலம் கனியவில்லைபோல் தெரிகிறது. ராமேசுவரத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி 10 விசைப்படகுகளில் சென்ற 50 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். மற்றொரு சம்பவத்தில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்ற 26 மீனவர்கள், ராமநாதபுரத்தில் இருந்து சென்ற 6 மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் 77 முறை இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கிப் பிடித்துச் சென்றுள்ளனர். இதில், 67 சம்பவங்களின்போது தமிழக மீனவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

மத்தியில் ஆட்சி மாற்றம்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமே இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்துமீறல்கள் மீண்டும் தொடர்வது, பாக் நீரிணை பகுதியில் நமது மீனவர்கள் அமைதியாக மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்வதற்கு உகந்ததாக இருக்காது. தொடர் அத்துமீறல்களாலும் அச்சுறுத் தல்களாலும் தமிழக மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவை திரும்பப் பெற..

தங்களது ஆட்சியில் இப்பிரச் சினைக்கு உறுதியான தீர்வு ஏற்பட வேண்டும். மூர்க்கத்தனமான தொடர் தாக்குதல்களில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க, காலக்கெடு நிர்ணயித்து, நீண்ட கால அடிப்படையில் நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழக அரசும், மத்திய அரசும் ஒருமித்து செயல்பட்டால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

உடனடி நடவடிக்கையாக, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை இந்திய அரசு கடுமையாக கண்டிப்பதை தாங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இலங்கை சிறைகளில் உள்ள 82 மீனவர்களையும் அவர்களது 18 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த 1-ம் தேதி விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 6 படகுகளையும் மீட்டுத் தரவேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x