Published : 30 Dec 2013 11:02 PM
Last Updated : 30 Dec 2013 11:02 PM

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்

தமிழகத்தின் முக்கியமான இயற்கை அறிவியலாளர்களில் ஒருவரான கோ.நம்மாழ்வார்(75), பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி என்ற கிராமத்தில் திங்கள்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

1938-ல் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப் பயிர் ஆய்வகத்தில் 1960-ம் ஆண்டு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

களப்பணியில் ஈடுபடாமல் செய்யப் படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து மூன்றாண்டு களில் வெளியேறிய இவர், பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம் ஆகிய வற்றுக்கு எதிராகக் குரல் கொடுத் தவர். அவற்றுக்கான ஆக்கபூர்வமான மாற்றுக்களையும் அவர் முன்வைத்தார். தமிழகத்தில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வந்த இவர், குடும்பம் அமைப்பு உட்பட 250க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராகவும் இருந்தார்.

‘தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் அனைத்துக்கும் சென்று கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தார்.

‘பேரிகை' என்ற இயற்கை உழ வாண்மை வாழ்வியல் மாத இதழையும் அவர் நடத்திவந்தார். மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர். மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்காக பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

அவரது மறைவு செய்தி அறிந்து வேளாண் உலகம் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளது. வேளாண்மை பற்றிய தகவல்களைத் தொகுத்து வரலாறாக இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் வகையில் ’உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘தாய்மண்ணே வணக்கம்’ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவருக்குச் ’சுற்றுச் சூழல் சுடரொளி' விருது வழங்கி கவுரவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x