Published : 01 Nov 2016 08:08 AM
Last Updated : 01 Nov 2016 08:08 AM

ஆம்னி கட்டணக் கொள்ளைக்கு முடிவு: அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நவீன வசதிகளுடன் சொகுசு பேருந்துகள்

பொங்கல் பண்டிகைக்குள் தயாராகின்றன

தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து தேவையும் அதிகரிக்கிறது. பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, பல்வேறு சூழ்நிலை காரணமாக மக்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப் பது வாடிக்கையாகிவிட்டது. இதனால், வெளியூர் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 10 ஆயிரம் பேருந்துகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி இடையே இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 1,000 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பிரேக் டவுன் ஆகின்றன. மேற் கூரை, இருக்கை, ஜன்னல் ஆகியவை உடைந் திருப்பது மக்களை முகம்சுழிக்க வைக்கிறது. இவற்றுக்கு மாற்றாக, புதிய பேருந்துகள் வருவதும் தாமதமாகிறது.

விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து களை அதிகபட்சம் 2 ஆண்டுகள் அல்லது 8 லட்சம் கி.மீ தூரம்தான் இயக்க வேண்டும். ஆனால், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து 500 பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இந்த பழைய பேருந்து களால் போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்லா மல், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டும் வகையில், ஆம்னி பேருந்து போல அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் நவீன சொகுசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

நீண்ட தூரம் செல்பவர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து கொஞ்சம் வசதியாக செல்ல விரும்புகின்றனர். எனவே, இதுபோன்ற பயணிகளைக் கவரும் வகையில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்குவது குறித்து தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

குறிப்பாக, ஒரே வரிசையில் மூன்று சொகுசு இருக்கை (2+1), ஏசி, படுக்கை வசதி, தொலைக்காட்சி, செல்போன் சார்ஜ் போடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றில் இருக்கும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 200 புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், கணிசமான பேருந்துகளை ஆம்னி பேருந்துகள்போல ஒதுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை 2017 பொங்கல் பண்டிகைக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x