Published : 04 Jun 2015 04:01 PM
Last Updated : 04 Jun 2015 04:01 PM

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளதால், இப்பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார வசதிகளும் ஏதும் இன்றி வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க முடியாத கட்டிடங்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

இதனால், கிராமங்களில் வசிக்கும் பலரும் தொலை தூரத்தில் இருக்கும் தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்கத் துடிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதால் தமிழகம் முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுத் துவக்கப்பள்ளியை நாடி பெற்றோர்கள் அதிகளவு வரத்துவங்கியுள்ளனர்.

முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செல்வநாயகபுரம் ஊராட்சி. இவ்வூராட்சிக்குட்பட்ட மாணவர்கள் தொடக்க கல்வி பயில அருகே உள்ள முதுகுளத்தூர் சென்று வந்தனர். இந்நிலையில் செல்வநாயகபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு 2011ம் ஆண்டில் தலைமை ஆசிரியராக வந்தார் ஆரோக்கிய ஜோசப்ராஜ்.

தனது சக ஆசிரியர்களான வெங்கட சுப்பிரமணியன், செந்தில் நாகராஜன் மற்றும் பரிஜான் பானு ஆகியோர் ஒத்துழைப்புடன் பொது நிதி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வழங்கப்பட்ட நிதியில், மூன்று புதிய கட்டட வசதிகள், மேற்கத்திய கழிப்பிட வசதிகள் என பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டன.

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதுடன் மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க தன்னார்வலர்கள் மூலம் தேவையான இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு படிக்கும் போதே சுற்றுச்சூழல் கல்வியாக மரம் வளர்ப்பது குறித்து பயிற்சி அளித்து வருவது பெற்றோர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்களது சீருடை மட்டுமின்றி, டை, பெல்ட், அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டைகளில், பெயர், முகவரியுடன், அவர்களது ரத்த வகையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம மக்களின் ஒத்துழைப்பே காரணம்:

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய ஜோசப்ராஜ் கூறும்போது, "இந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு ஆங்கில வழி சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்துள்ளோம். மாணவர்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் அரசு நிதி உதவி மற்றும் உள்ளுர் மக்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக 56ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 100ஐ எட்டியுள்ளது. மாவட்ட அளவில் எங்கள் மாணவர்கள் அரசு கேரம் மற்றும் செஸ் விளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

படிக்கும் போதே மாணவர்களுக்கு மரங்கள் வளர்ப்பதற்கு ஊக்குவிக்கிறோம். தற்போது பள்ளியைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம். மாணவர்கள் அவற்றை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வழங்கப்பட்ட கம்ப்யூட்டர், லேப்-டாப் மூலம் தினசரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும் முறையாக வழங்கப்படுகிறது.

விரைவில் எல்.சி.டி. ப்ரொஜெக்டர்களும், இன்டர்நெட் இணைப்பும் அளித்து ஸ்மார்ட் பள்ளியாக மாற்றுவதற்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் கடுமையாக உழைத்து வருகிறோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x