Published : 09 Nov 2016 10:30 AM
Last Updated : 09 Nov 2016 10:30 AM

அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை

கவுதாரி பறவைகள் பெரும் பாலும் வறட்சி மிகுந்த பகுதிகளில் வசிக்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் நெல்லை போன்ற வறட்சியான மாவட்டங் களில் முட்புதர், தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் பரவலாகக் காணப் படுகின்றன.

சாதாரண நாட்டுக் கோழிகளைப் போன்ற உடல் அமைப்புடன் பருத்த உடல் அமைப்பைக் கொண்ட இந்தப் பறவைகள், இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன.

30 சதவீதம் அழிந்துவிட்டன

விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், நகர மயமாக்கல் போன்றவற்றால் இந்தப் பறவை அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பறவைகள் 20,000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பரவிக் காணப்பட்டாலும், இவை எண் ணிக்கையில் மிகக் குறைந்த அளவு உள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீ தம் பறவைகள் அழிந்துவிட்டதாக வும், ஒவ்வோர் ஆண்டும் 10 சதவீதம் பறவைகள் அழிவதாகவும் ஆய் வில் அறியப்பட்டுள்ளது. உலக அள வில் இப்பறவைகள் 10,000 வரை எண்ணிக்கையில் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு கூறியதாவது:

குழுக்களாக வசிக்கும்

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இந்தப் பறவைகள் ‘பிராங் கோலின்ஸ் பாண்டிசேரியானஸ்’ எனும் அறிவியல் பெயரால் அழைக்கப்படுகின்றன.

அடர்ந்த காட்டுப்பகுதியை விரும்பாத இந்தப் பறவை இனங்கள் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி களையும் தவிர்த்து மற்றப் பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக வசிக்கின்றன.

வேகமாக ஓடக்கூடியவை

மெலின் என்பவர், 1789-ம் ஆண்டில் இந்தப் பறவையை உலகுக்கு அறிமுகம் செய்தார். இந்தப் பறவைகள், 100 மீட்டர் தூரத்துக்கு மேல் பறக்காது. ஆனால், மிகுந்த வேகமாக ஓடும் திறன் பெற்றவை.

ஆண், பெண் பறவைகள்

இந்தப் பறவைகளில் ஆண் மற்றும் பெண்ணைப் பிரித்து அறிதல் கடினம். ஆண் பறவைகள் 28-34 செமீ வரையிலும், 250-350 கிராம் எடையுடன் வளரக்கூடியவை. பெண் பறவைகள் 25-30 செமீ நீளமும், 200-320 கிராம் எடையையும் கொண்டிருக்கும்.

ஆண் பறவைகளின் கழுத்துப் பகுதிகளில் உள்ள வளையல் போன்ற அமைப்பு மற்றும் காலில் உள்ள கொம்பு போன்ற உறுப்பின் மூலம் இதைப் பிரித்து அறிய முடியும்.

பாம்புகளையும் வேட்டையாடும்

இந்தப் பறவைகள் பிரத்யேக ஒலி சமிக்ஞைகள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும். விதை கள், தானியங்கள், பூச்சிகள், கரையான்கள், வண்டுகள், புழுக் கள் மற்றும் எறும்புகள் இதன் விருப்ப உணவாகக் கருதப்பட்டாலும், இவை பாம்புகளையும் வேட்டை யாடி உண்பதாகக் கண்டறியப்பட் டுள்ளது.

பண்டைய காலத்தில் சண் டைப் பயிற்சிக்காக வளர்க்கப் பட்டதாகவும் வரலாற்றுத் தகவல் கள் உள்ளன. பகலில் தரைப் பகுதிகளில் அதிக நேரத்தைச் செலவிடும். இரவில் கருவேல மரங்களில் ஓய்வெடுக்கும் என்றார்.

அந்நிய மரங்களாலும் அழிகின்றன

பொதுவாக இவை 6 முதல் 8 முட்டைகள் இட்டு அடைகாக்கும். சில சமயங்களில் 10 முதல் 14 முட்டைகளும் இடுகின்றன. தரைப் பகுதிகளில் கூடுகட்டி வசிக்கின்றன. 18 முதல் 21 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சுகளைப் பொரிக்கும். உணவுக்காகவும், அழகுக்காகவும் வேட்டையாடப்படும் இந்தப் பறவைகள் காடுகளில் அந்நிய மரங்கள் அதிகரிப்பாலும் அழிவதாகக் கூறப்படுகிறது. அந்நிய மரங்களால் பூச்சிகள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதால், பூச்சிகளை முக்கிய உணவாக உட்கொள்ளும் இந்தப் பறவைகள் இரை தட்டுப்பாட்டாலும் அழிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x