Last Updated : 15 Feb, 2017 07:22 AM

 

Published : 15 Feb 2017 07:22 AM
Last Updated : 15 Feb 2017 07:22 AM

அரசியல் வாழ்வில் மாபெரும் சரிவை சந்திக்கும் சசிகலா

கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அரசியல் வாழ்வில் தற்போது மாபெரும் சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

1956 ஜனவரி 29-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவே கானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியரின் 6 குழந்தைகளில் 5-வதாக பிறந்தவர் சசிகலா. எல்லா பெண்களைப் போலவே வளர்ந்த சசிகலாவின் வாழ்வில் திருமணம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. திமுகவில் தீவிர ஈடுபாடு கொண்டவரும், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியுமான மன்னார்குடியைச் சேர்ந்த ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

ஜெயலலிதாவுடன் அறிமுகம்

தீவிர அரசியலில் இறங்கிய ஜெயலலிதா 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் எம்ஜிஆர் கேட்டுக் கொண்டார். இதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார் சந்திரலேகா.

அந்த நேரத்தில் கடலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.வாக இருந்த நடராஜன் தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது சசிகலா தம்பி திவாகரனுடன் இணைந்து ஆழ்வார்பேட்டையில் வீடியோ கடை நடத்தி வந்தார். அந்த வீடியோ கடையிலிருந்து ஜெயலலிதா தனக்குப் பிடித்த படங்களின் வீடியோக்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது போயஸ் கார்டனுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

முதல் அரசியல் பணி

அந்த காலகட்டத்தில் எஸ்.டி.சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக் கூட்டம் நடத்தினர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்த பொதுக் கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் ஜெயலலிதாவும் - சசிகலாவும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இதுதான் சசிகலாவின் முதல் அரசியல் பணி.

அதன்பிறகு போயஸ் தோட்ட இல்லத்திலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். ஜெயலலிதா எங்குச் சென்றாலும் அங்கு சசிகலாவும் இருப்பார். அந்த அளவுக்கு இருவரது நட்பும் வளர்ந்தது.

எம்ஜிஆர் மறைவு தந்த வாய்ப்பு

1987-ல் முதல்வராக இருந்த எம்ஜிஆர் மறைந்ததும் அரசியலில் இருந்து ஜெயலலிதாவை ஓரங்கட்ட அதிமுக மூத்த தலைவர்கள் முயன்றனர். எம்ஜிஆரின் உடல் அருகில் கூட ஜெயலலிதாவை நிற்க அனுமதிக்காமல் அவமானப்படுத்தினர்.

அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் அவரின் அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. 1989 தேர்தலில் அதிமுக ஜெ. அணி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியால் அவரது தலைமையில் அதிமுக ஒன்றிணைந்தது. இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது. இதுபோன்ற சோதனையான காலகட்டங்களில் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்தவர் சசிகலா.

வளர்ப்பு மகன் திருமணம்

1991-ல் ஜெயலலிதா முதல்வரானார். சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தனது வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, அவருக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தினார். இது அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில்தான் சசிகலாவுக்கு அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் 1996 தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவால் கூட எம்எல்ஏ ஆக முடியவில்லை.

சசிகலா வெளியேற்றம்

அதனைத் தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். சுதாகரனைத் தனது வளர்ப்பு மகன் இல்லை என்றும் அறிவித்தார். கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். ஆனால், சில மாதங்களிலேயே போயஸ் தோட்ட இல்லத்துக்கு சசிகலா திரும்பினார்.

அதன்பிறகு சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனை ஜெயலலிதா எம்பியாக்கினார். சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசன் சில ஆண்டுகள் கட்சிப் பொறுப்பில் இருந்தார். இவர்களைத் தவிர சசிகலா குடும்பத்தில் யாருக்கும் ஜெயலலிதா பதவி அளிக்கவில்லை.

2-வது முறையாக வெளியேற்றம்

2011-ல் ஜெயலலிதா முதல்வ ரானதும் சில மாதங்களிலேயே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கியதுடன் போயஸ் கார்டனில் இருந்தும் வெளியேற்றினார். ஆனால், சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுக்க 10 மாதங்களில் அவரை மட்டும் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா அனுமதித்தார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா கட்சியிலும், வீட்டிலும் அனுமதிக்கவில்லை.

தலைமை செயற்குழு உறுப்பினர் தவிர வேறு எந்த பொறுப்பும் சசிகலாவுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த அதிகார மையமாக அவரே இருந்தார். அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் கூட்டணி பேச்சு, அதிமுக நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, அமைச்சர்கள் நியமனம், நீக்கம் என அனைத்தையும் சசிகலாவே மேற்கொண்டார் என பேசப்பட்டது. அந்த அளவுக்கு அதிகாரம் மிக்கவராக சசிகலா இருந்தார்.

ஜெ. மறைவுக்குப் பிறகு..

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வமாக அதிமுக சசிகலாவின் கட்டுக்குள் வந்தது. சசிகலாவின் அரசியல் வாழ்வில் பெற்ற மிகப்பெரிய ஏற்றம் இது.

கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்த அவர் முதல்வர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார். கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 7 அல்லது 9 ஆகிய தேதிகளில் அவர் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அவரது அரசியல் வாழ்வில் சறுக்கல் தொடங்கியது. முதல்வர் பதவியேற்பு தள்ளிப்போனது.

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் 4 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சசி கலாவின் முதல்வர் கனவு தகர்ந்துள்ளது. அரசியல் ஏற்ற இறக்கங்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை கைப்பற்றி உச்சத்துக்குச் சென்றார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x