Published : 05 Dec 2016 08:47 PM
Last Updated : 05 Dec 2016 08:47 PM
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தவறான தகவல் வெளியானதால் தமிழகம் முழுவதும் அதிமுக கொடிக்கம்பங்கள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிறகு முழுக்கம்பத்தில் ஏற்றப்பட்டன.
கடந்த 75 நாள்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சில தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் தவறான தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அதிமுக கொடி இறக்கப்பட்டு அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதுபோல தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் அதிமுக கொடிகள் உடனடியாக அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
இந்நிலையில் இன்று மாலை 6.10 மணி அளவில் முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனைகள் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ''அப்போலோ சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் முதல்வரின் உடல்நிலையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
சில தனியார் தொலைக்காட்சிகள் முதல்வர் ஜெயலலிதா பற்றி தவறான தகவல் வெளியிட்டுள்ளன. இந்த செய்தி அடிப்படை இல்லாததும், பொய்யானதும் ஆகும். இந்த அறிக்கையைக் கொண்டு அவர் தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்ட அதிமுக கொடி மீண்டும் முழுக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இறக்கப்பட்ட அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.
அரைக் கம்பத்தில் பறந்த அதிமுக கொடி மீண்டும் முழுக் கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதனால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்கள் தவறான செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT