Published : 15 Feb 2017 04:25 PM
Last Updated : 15 Feb 2017 04:25 PM

அதிமுக ஓரணியாக திரள முயற்சி எடுத்து வருகிறேன்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தகவல்

அதிமுக ஓரணியாக திரள முயற்சி எடுத்து வருவதாக அதிமுகவின் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. யாரை ஆதரிப்பார் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் நிலவிவந்தன.

இந்நிலையில், நட்ராஜ் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் > ( https://www.facebook.com/NatarajIpsR/ ) ஆர்.நட்ராஜ் பதிவு செய்திருக்கும் நிலைத்தகவல்: >

"நல்லோர் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.

காவல் துறையில் பணியாற்றிய எனக்கு மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கினார்கள். மேலும் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் காக்கும் அரணாக திகழ்வேன் என்று என் மீது அதீத நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். அம்மாவின் நம்பிக்கைக்குரிய என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து மயிலை வாக்காளர்கள் சிறப்பு செய்தார்கள். மக்களுக்கு செய்யும் சேவையே மாண்புமிகு அம்மா அவர்களுக்கு செய்யும் புனிதப்பணி என உண்மை ஊழியனாக சேவையாற்றி வருகின்றேன். இந்நிலையில் சோதனை தேடி வந்தது. இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எல்லோரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். இரும்பு கோட்டையான கழகம் சோதனைக் கணைகளை சந்தித்து வருகிறது. ஒரு தாய் பிள்ளைகளான கழகத்தில் பிரிவினை உண்டானது. இச்சூழலில் நான் எப்படி செயல்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஆகிய எனக்கு தொகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். "மக்களால் நான்! மக்களுக்காகவே நான்! என்று வாழ்ந்து வந்த அம்மாவின் உண்மை தொண்டனான நானும் நடுநிலை வகித்து வந்தேன்.

முகநூலில் "மக்கள் பக்கமே நான் " என்பதை உறுதிபட தெளிவு படுத்தியிருந்தேன். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. கழக முன்னோடிகள் மற்றும் சக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ,கட்சியை காப்பாற்ற வேண்டும், மக்களாட்சி தொடர, தடையின்றி மக்கள் பணியாற்ற , அரசு அமைய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

எந்த பிர்ச்சனையானாலும் பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டும்.அதைத்தான் அம்மா அவர்கள் கற்றுத்தந்தார்கள். தன் உடல் நலனும் பாராது அர்ப்பணிப்போடு உழைத்து அம்மா அவர்கள் பெற்றுத்தந்த மக்கள் வாக்கினை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்.

என்வழிதான் நேர்வழி என்று முரண்டு பிடித்து நின்றால் படுகுழி காத்திருக்கும் என்பதை உணர வேண்டும். ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டிருந்தால் எதிரிக்குத்தான் கும்மாளம்.

அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும்.இதய தெய்வம் அம்மா நம் மீது வைத்திருந்த நம்பிக்கையை நிறைவேற்ற ,எல்லோரும் முயற்சி திருவினையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமிது.

" Politics is the art of the Possible"- சாத்திய தேடலே அரசியல் கலை என்பது முதுமொழி, சத்திய வாக்கு.

மேலும் நான் பணியாற்றுவதில் வெளிப்படை தன்மையோடும் பதில்சொல்லும் கடமை உணர்வோடும் மக்கள் சேவகனாக செயல்படுவேன் . நல்ல ஒரு தீர்வு ஏற்பட ஓரணியாக திரள முயற்சி எடுத்து வருகிறேன்"

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x