Published : 18 Feb 2017 02:10 PM
Last Updated : 18 Feb 2017 02:10 PM

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கிய கூவத்தூர் விடுதி திடீர் மூடல்

அதிமுக எம்எல்ஏக்கள் 11 நாட்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதியை சில பராமரிப்புப் பணிகளுக்காக மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களிடம் ஆதரவு பெறுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சசிகலா தரப்பு எம்எல்ஏக் கள் கடந்த 8-ம் தேதி இரவு முதல் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர்.

அதிமுகவில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களால் கூவத்தூர் விடுதி தினமும் பரபரப்பாக இருந்து வந்தது.

அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவர் 16-ம் தேதி மாலை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்பில் கலந்துகொண்ட சசிகலா தரப்பு அதிமுக எம்எல்ஏக் களில் சிலர் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் கூவத்தூர் விடுதிக்குத் திரும்பினர்.

இந்நிலையில் இன்று பெரும்பான்மை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் விடுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

எதிர்க்கட்சிகளின் அமளி, தொடர் முழக்கத்தால் சட்டப்பேரவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது முறையாக சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு உள்ளே இருந்த நிலையில், கூவத்தூர் விடுதியை சில பராமரிப்புப் பணிகளுக்காக மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒருவேளை, இன்று வாக்கெடுப்பு நடைபெறவில்லை எனில், மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அழைத்து வரப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் விடுதி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x