Last Updated : 16 Jun, 2014 10:11 AM

 

Published : 16 Jun 2014 10:11 AM
Last Updated : 16 Jun 2014 10:11 AM

அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு என்எல்சி கல்வித்துறை சார்பில் கட்டாய தற்காப்புக் கலை கடந்த 6 மாதமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நெய்வேலிப் பள்ளிகளில் கடந்த 6 மாதமாக 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு கட்டாய தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படுகிறது. புதுடெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரிழக்க நேரிட்டச் சம்பவத்தை உணர்ந்த என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன், நெய்வேலியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சியை கட்டாயம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து என்எல்சி கல்வித் துறை சார்பில் நெய்வேலியில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கட்டாய தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான பயிற்சியாளர்களை என்எல்சி கல்வித் துறை நியமனம் செய்து அனுப்பிவைக்கும் எனவும், சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தற்காப்புக் கலையில் நிபுணத்துவம் பெற்ற என்எல்சி ஊழியர்கள் வாசுதேவன், விஜயசங்கர், சையத்அப்துல்லா மற்றும் பெரியசாமி என 4 பேரை தேர்வு செய்து அவர்கள் மூலம் பயிற்சி அளித்துவருகிறது.

இது தொடர்பாக பயிற்சியாளர் களில் ஒருவரான வாசுதேவன் கூறுகையில், புதுடெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட துயரத்திற்குப் பின் என்எல்சி நிர்வாகம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசித்து அதை சேவையாக செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இதையடுத்து நெய்வேலியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தனித் தனி நேரம் ஒதுக்கி மாதம் ஒருமுறை பயிற்சி அளிக்கிறோம்.

இப்பயிற்சியில் பல மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் என்ன தான் சட்டங்கள் இயற்றி குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் குற்றம் குறைந்தபாடில்லை.

எனவே தற்போதுள்ள சூழலில் தனிமையில் இருக்கும் ஒரு பெண், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களிடம் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியம். எனவே பெண்கள் முதற்கட்டமாக ஆண் பிடியிலிருந்து வெளியேற வேண்டுமானால் தற்காப்புக் கலைகள் ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்திலிருந்து விடுபட முடியும். அந்த நோக்கில் தான் தற்காப்பு கலை பயிற்சியை வழங்கி வருகிறோம். நெய்வேலி மட்டுமல்ல நெய்வேலியைச் சுற்றியுள்ள பெண்கள் பயிலும் பள்ளிகளிலும் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x