Published : 25 Aug 2015 12:47 PM
Last Updated : 25 Aug 2015 12:47 PM
அடையார் புற்று நோய் மையம் ரூ.120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அவர் வாசித்த அறிக்கையில், "புற்று நோய் போன்ற தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மண்டல புற்று நோய் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
புற்று நோயை குணப்படுத்த அடையார் புற்று நோய் மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதை ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு கோரிக்கையினை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி, சென்னை, அடையாறு புற்று நோய் மையம், மாநில உயர்நிலை மையமாகவும், ஒப்புயர்வு மையமாகவும் 120 கோடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும்.
மேலும், மார்பக புற்று நோயை கண்டறிந்து உறுதி செய்ய 15 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், மேமோகிராபி (mamography) மருத்துவக் கருவிகள் வழங்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT