Published : 03 Jul 2014 08:46 AM
Last Updated : 03 Jul 2014 08:46 AM

அடுக்குமாடி கட்டிட விபத்தில் சேதமடைந்த வீடுகளை கட்டித்தர வேண்டும்: பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் கோரிக்கை

மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகில் இருந்த சில வீடுகள் சேதமடைந்தன. அந்த வீடுகளை கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வசித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கடந்த 28-ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் அந்த கட்டிடத்துக்கு பின்னால் இருந்த 3 வீடுகள் பலத்த சேதமடைந்தன. அதில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள 12 மாடிக் கட்டிடமும் பாதுகாப்பானதாக இல்லை என்று கூறி அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதையடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் பின்புறம் உள்ள தெருவில் வசித்து வந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் சேதமடைந்த வீடுகளில் வசித்து வந்த சாந்தி, கமலா உள்ளிட்ட பலர் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளை புதன்கிழமை பார்வையிட வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

ஆரம்பத்தில் இருந்தே இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்த்து வந்தோம். ஆனால் அது இப்படி இடிந்து விழும் என்று நினைக்கவில்லை. கட்டிடம் இடிந்து எங்கள் வீட்டின் மீது விழுந்ததில் நாங்கள் கடன் வாங்கி ஆசையாக கட்டிய வீடு சேதமடைந்துவிட்டது. சேதமடைந்த வீட்டை மீண்டும் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, முதல்வரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

12 மாடி கட்டிடத்தை இடிக்க கோரிக்கை

இடிந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள 12 மாடிக் கட்டிடத்தை இடிக்கவேண்டும் என்று அந்த கட்டிடத்துக்கு பக்கத்தில் குடியிருப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:

இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள 12 மாடி கட்டிடத்துக்கு அரசு சீல் வைத்துள்ள தாக கேள்விப்பட்டோம். அந்த கட்டிடம், எப்போது இடிந்து விழும் என்று தெரியவில்லை. இந்த பகுதியில் குழந்தைகளுடன் வசிக்கவே பயமாக இருக்கிறது. அதனால், பாதுகாப்பு இல்லாத அந்த கட்டிடத்தை இடித்து தள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x