Published : 23 Jul 2014 09:30 PM
Last Updated : 23 Jul 2014 09:30 PM

ஷரபோவா தெரியாது என்று கூறியது மரியாதைக்குறைவு அல்ல: சச்சின் டெண்டுல்கர்

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தன்னைத் தெரியாது என்று கூறிய கருத்தை மரியாதைக்குறைவு என்று கருத வேண்டிய அவசியமில்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைக் காண சச்சின் லண்டன் சென்றிருந்தார். அப்போது மரியா ஷரபோவா பங்கேற்ற ஒரு போட்டியைக் காணச் சென்றபோது போட்டி முடிந்தவுடன் நிருபர் ஒருவர் கேட்ட போது கால்பந்து வீரர் டேவிட் பெக்காமைத் தெரியும் என்றும் அவரை இருமுறைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிறகு இவரைத் தெரியுமா என்று சச்சின் டெண்டுல்கரைக் காட்டி கேட்டபோது ஷரபோவா, ‘தெரியாது’ என்றார். இது சச்சின் ரசிகர்களை ஆவேசமூட்ட பேஸ்புக், டிவிட்டர் என்று ஷரபோவாவை திட்டித் தீர்த்தனர்.

இந்த விவகாரம் பற்றி தனியார் சானல் ஒன்று சச்சினிடம் கேள்வி எழுப்பியபோது, "ரஷ்ய வீராங்கனை ஷரபோவா கிரிக்கெட் பற்றி தெரியாதவராக இருக்கலாம், அதற்காக அவர் என்னைத் தெரியாது என்று கூறியதை மரியாதைக்குறைவான கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நான் டென்னிஸ் ஆட்டத்தை மிகவும் நெருக்கமாகப் பார்த்து கொண்டிருப்பவர்களில் ஒருவன். அதனால் எனக்குத் தெரியும், பெடரருடன் சந்தித்து உரையாடினேன்.

ஒருவருக்கு மற்றொருவரை தெரியாது என்பதை மரியாதைக்குறைவான விஷயமாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நான் பேஸ்கட் பால் ஆட்டத்தை நெருக்கமாகப் பார்ப்பதில்லை. அதில் யாரையாவது குறிப்பிட்டுக் கேட்டால் எனக்கும் தெரியாது என்றுதான் கூறுவேன்.

எனவே ஷரபோவா கிரிக்கெட்டை நெருக்கமாக பார்க்காதவராக இருக்கலாம், அதற்காக அவரது கருத்தை என் மீதான மரியாதைக் குறைவான கருத்தாகப் பார்க்க வேண்டியதில்லை. என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x