Published : 24 Oct 2016 06:12 PM
Last Updated : 24 Oct 2016 06:12 PM

வரலாற்று வெற்றிக்கு அருகில் வந்து தோற்ற வங்கதேசம்

சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வித்தியாசத்தில் நெருக்கமான தோல்வி தழுவி ஏமாற்றமடைந்துள்ளது வங்கதேசம்.

வெற்றிக்குத் தேவையான 286 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம் இம்ருல் கயேஸ் (43), சபீர் ரஹ்மான் (64), முஷ்பிகுர் (39) ஆகியோர் பங்களிப்பின் மூலம் போராடி 4-ம் நாள் ஆட்ட முடிவில் நேற்று 258/8 என்று இருந்தது. சபீர் ரஹ்மான் 59 ரன்களுடனும் தைஜுல் இஸ்லாம் 11 ரன்களுடனும் நேற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆனால் இன்று சபீர் 64 ரன்களில் நிற்க, எதிர்முனையில் தைஜுல் இஸ்லாம் மற்றும் ஷபியுல் இஸ்லாம் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் எல்.பி.முறையில் கைப்பற்றி கனவைத் தகர்த்தார்.

263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இன்று இழந்து சபீர் ரஹ்மானின் கடும் அதிருப்திக்கு மத்தியில் வரலாற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து கடைசி வரை தனது உறுதியை விட்டுக்கொடுக்காமல் ஆடியது.

94 டெஸ்ட் போட்டிகளில் தங்களது 8-வது டெஸ்ட் வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 9 டெஸ்ட்களில் முதல் வெற்றி என்ற கனவுகளை தன்னகத்தே கொண்டு ஆடிய வங்கதேசம் உண்மையில் அபாரமாக இங்கிலாந்தை தோல்வி அச்சுறுத்தலுக்குள்ளாக்கியது.

வெற்றி பெற 33 ரன்கள் என்று தொடங்கிய வங்கதேச வீரர்களில் சபீர் முதலில் கவர் திசையில் 2 ரன்களை எடுக்க, தைஜுல் இஸ்லாம் ஸ்டோக்ஸின் ஷார்டிபிட்ச் பந்தை கீப்பர் தலைக்கு மேல் பவுண்டரி அடித்தார். புதிய பந்து எடுக்கலாம் என்ற நிலையில் அலிஸ்ட குக் பழைய பந்திலேயே தொடர்ந்தார், ஏனெனில் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் பழைய பந்தில் அபாரமாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 26 முறை டி.ஆர்.எஸ். முறையினால் தீர்ப்பு வழங்கவோ அல்லது வழங்கிய தீர்ப்பை மாற்றி அமைக்கவோ முடிந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

81-வது ஓவரை வீசிய பிராடின் கடைசி பந்தில் தைஜுல் சிங்கிள் எடுத்தார். இதுவே முடிவுக்கு வழி வகுத்தது, 82-வது ஓவரில் ஸ்டோக்ஸ் சம்பிரதாயத்தை முடித்து வைத்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ஸ்டோக்ஸ் கைப்பற்ற கையாலாகாத்தனத்துடனும், வேதனையுடனும் சபீர் 64 ரன்களில் ஒரு முனையில் நின்றார் வியர்த்தமாக. அந்த சிங்கிளை எடுக்காமல் இருந்திருக்கலாம். ஒரு சிறிய முடிவு ஆட்டத்தின் விதியையே மாற்றுவது என்பதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு சிறப்பு வாய்ந்த குணாம்சம்.

இன்னும் ஒரு போட்டி இருக்கும் நிலையில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணியில் பாட்டீ 3 விக்கெட்டுகளையும் மொயின் அலி, பிராட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வோக்ஸ், ரஷீத் ஆகியோர் முறையே ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x