Published : 27 Jan 2015 09:46 AM
Last Updated : 27 Jan 2015 09:46 AM

மாநில பூப்பந்து போட்டி : முதலமைச்சர் கோப்பையை வென்ற சென்னை மகளிர் அணி

திண்டுக்கல் அருகே நத்தத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து போட்டியில் மகளிர் பிரிவில் சென்னை அணியும், ஆடவர் பிரிவில் திருப்பூர் அணியும் முதலிடம் பெற்றன.

நத்தம் என்.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை திருப்பூர் மாவட்டமும், இரண்டாம் பரிசை காஞ்சிபுரம் மாவட்டமும், மூன்றாம் பரிசை திருவள்ளுர் மாவட்டமும், நான்காம் பரிசை ஈரோடு மாவட்டமும் பெற்றன.

பெண்கள் பிரிவில் முதல் பரிசை சென்னையும், இரண்டாம் பரிசை நாமக்கல் மாவட்டமும், மூன்றாம் பரிசை காஞ்சிபுரமும், நான்காம் பரிசை திண்டுக்கல் மாவட்டமும் பெற்றன.

பரிசளிப்பு விழாவுக்கு ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமை வகித் தார். அமைச்சர் ஆர்.விசுவநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு கோப் பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, கல்வியின் ஒரு அங்கமாகத் திகழும் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் திறமையான இளைஞர்களை கண்டறிந்து, அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கவும் ஊராட்சி அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் பேசும்போது, தேசிய அளவிலான போட்டிகளுக்கு நிகராக, தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

விளையாட்டுத் துறைக்கு கடந்த 2010-11 ம் ஆண்டில் ரூ. 56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013-14-ம் ஆண்டில் ரூ.218 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கல்வியறிவும், வாழ்க்கையின் மற்ற வளங்களும் சிறப்பாக அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x