Last Updated : 28 Jan, 2015 08:58 PM

 

Published : 28 Jan 2015 08:58 PM
Last Updated : 28 Jan 2015 08:58 PM

தோனியும் கோலியும் மட்டுமே வெற்றி பெறச் செய்ய முடியாது; 6 வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்: திராவிட்

வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் தோனி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே கோப்பையை வென்று விட முடியாது, குறைந்தது 6 வீரர்கள் சிறப்பாக ஆடுவது அவசியம் என்று ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் இந்தியாவின் வாய்ப்புகள் பற்றி திராவிட் கூறும்போது, “இது மிகப்பெரிய சவால், எளிதானது கிடையாது, முற்றிலும் வேறு சூழல்களில் நாம் விளையாடவிருக்கிறோம்.

ஆஸ்திரேலிய, நியூசி. பிட்ச்கள் எதிர்பார்த்தை விட மெதுவாகவும் பந்துகள் திரும்புவதற்கு சாதகமாகவும் அமைந்தால் 2 அல்லது 3 ஸ்பின்னர்களைக் கூட அணியில் சேர்த்து விளையாடலாம் இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இவர்கள் தவிர, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

இதில் நெருக்கடி நிலைமைகளை எந்த அணி சமாளித்து வெல்கிறது என்பதே. நெருக்கடி தருணங்களில் சிறப்பாக செயல்படும் அணியே வெற்றி பெறும். இந்தியா காலிறுதிக்குத் தகுதி பெறும். அந்த மட்டத்தை எட்டுவதற்கான வீரர்கள் நம்மிடையே உள்ளனர். ஆனால் அதன் பிறகு 3 போட்டிகளில் தொடர்ந்து அதிசிறப்பாக விளையாட வேண்டும். இந்த நிலைக்கு முன்னேறினால் 11 வீரர்களும் டாப் ஃபார்மில் இருப்பது அவசியம்.

விராட் கோலி ஆட்டத்தின் 10 அல்லது 12 ஓவர்கள் சென்ற பிறகு களமிறங்க வேண்டும், அப்போதுதான் அவர் ஒரு பெரிய இன்னிங்ஸை திட்டமிட முடியும். ரோஹித் சர்மா காயம் பெரிய பின்னடைவுதான், உலகக்கோப்பைக்குள் அவர் தயாராகி விடுவார் என்று நம்புவோம். ஷிகர் தவான் இன்னும் கொஞ்ச நேரம் கிரீஸில் நிற்க முயற்சி செய்ய வேண்டும்.

பந்துவீச்சு சமீபகாலமாக மோசமாக உள்ளது. ஆனால் இசாந்த் சர்மா, ஜடேஜாவின் வரவு அணிக்கு பலம் சேர்க்கும்.

ஃபார்ம் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. அதிக போட்டிகளில் விளையாடினால் ஃபார்ம் மீண்டும் தானாகவே வந்து சேரும்.

தோனியும், விராட் கோலியும் மட்டுமே உலகக்கோப்பையை வென்று விட முடியாது, குறைந்தது 6 வீரர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்வது அவசியம்.” என்று கூறினார் திராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x