Published : 22 Dec 2014 04:28 PM
Last Updated : 22 Dec 2014 04:28 PM

டி.ஆர்.எஸ். முறையை ஏற்காத பிசிசிஐ-யின் பிடிவாதம்: முன்னாள், இந்நாள் வீரர்கள் விமர்சனம்

நடுவர் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் முறையை பிசிசிஐ இன்னும் ஏற்றுக்கொள்ளாத நிலையை ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

ஆனால், ஒன்றை நாம் நிச்சயமாகக் கூறிவிட முடியும். அடிலெய்ட் டெஸ்ட் 2-வது இன்னிங்ஸ் மராத்தான் துரத்தலின் போது டி.ஆர்.எஸ். இருந்திருந்தால் முரளி விஜய், விராட் கோலி நீடித்திருக்க முடியாது என்பதே உண்மை.

இன்னொன்று, பிரிஸ்பன் டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அவுட்டேயில்லை என்று சிலரால் வாதிடப்படுகிறது. ஆனால், ரோஹித் சர்மா ஆடும் விதம், இந்தப் பந்து இல்லையென்றால் அடுத்த பந்திலோ அல்லது அதற்கு அடுத்த பந்திலோ அவுட் ஆகிவிடுவார் என்பது போல்தான் ஆடி வருகிறார். இந்தத் தீர்ப்பினால் இந்தியாவுக்கு பாதகம் ஏற்பட்டு விட்டது என்ற வாதம் மிக நொய்மையானது என்றே நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.

டி.ஆர்.எஸ் பிரயோகம் பற்றி ஹர்பஜன் சிங் கூறியதாவது: “டி.ஆர்.எஸ். முறைக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் நம் அணிக்கு நன்மை விளையும்.

நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பார்த்தால், இந்தியா சவாலாக ஆடியது, ஆனால் முக்கியமான தருணங்களில் தீர்ப்புகள் பாதிப்பை ஏற்படுத்தியது. நான் ஒரு 4 தீர்ப்பை கூற முடியும், ஷிகர் தவன் அடிலெய்ட் 2வது இன்னிங்ஸில் தோள்பட்டையில் பட்டுச் சென்ற பந்துக்கு அவுட் கொடுக்கப்பட்டார். புஜாரா பிரிஸ்பன் முதல் இன்னிங்ஸில் தவறான தீர்ப்பிற்கு இரையானார். பிறகு ரொஹித் சர்மா, அஸ்வின் தீர்ப்புகள்.

டி.ஆர்.எஸ். இருந்திருந்தால் இந்த 4 தவறுகளும் திருத்தப்பட்டிருக்கும். டி.ஆர்.எஸ். ஒரு துல்லியமான முறை அல்ல என்பதை நானும் அறிவேன், ஆனால் 90% அது சரியாக இருக்கிறது என்றால் கூட முக்கியத் தருணங்களில் நமக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மொகமது அசாருதீன்: மற்ற நாட்டு அணிகள் டி.ஆர்.எஸ். முறைக்கு ஒப்புக் கொள்ளும் போது இந்தியா ஏன் அதனை புறக்கணிக்க வேண்டும்? பிரிஸ்பன் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக சில தீர்ப்புகள் சென்றன. அவை நிச்சயம் டி.ஆர்.எஸ்-சினால் மாற்றப்பட்டிருக்கும்.

ஐசிசி டி.ஆர்.எஸ்-ஐ அமல் செய்கிறது என்றால் அனைத்து அணிகளும் அதனை பயன்படுத்துவதுதான் முறை. ரன் அவுட்களில் பல முறை பேட்ஸ்மென் அரை பிட்சில் இருக்கும் போது கூட மூன்றாவது நடுவரை கேட்கின்றனர். இப்படியிருக்கையில் டி.ஆர்.எஸ் முறையை ஏற்றுக் கொள்ளாததை என்னால் ஏற்கமுடியவில்லை.

திலிப் வெங்சர்க்கர்: டி.ஆர்.எஸ் 100% துல்லியமானது அல்ல, ஆனாலும் நிறைய சுலபமான தீர்ப்புகள் இந்தியாவுக்கு சாதகமாக இல்லாத நிலையில் டி.ஆர்.எஸ்-ஐ ஏற்கவேண்டும் என்றே நான் கூறுகிறேன்.

சந்துபோர்டே: வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொழில்நுட்பம் நம்மை சூழ்ந்துள்ளது. கிரிக்கெட்டை அது மேம்படுத்தும் பட்சத்தில் அதனை பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? முன்னங்காலை வெளியே வைக்கும் நோ-பால் முறையை பலரும் எதிர்த்தனர். இன்று அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றானது. அதே போல் டி.ஆர்.எஸ். முறையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x