Published : 25 Oct 2016 03:57 PM
Last Updated : 25 Oct 2016 03:57 PM

இந்திய அணியை விராட் கோலி இதுவரை கண்டிராத உச்சத்திற்கு அழைத்துச் செல்வார்: அஸ்வின் புகழாரம்

ஒருநாள் போட்டிகளில் 26 சதங்களை அடித்துள்ள விராட் கோலி இந்திய அணியை உச்சத்திற்கு இட்டுச் செல்வார் என்று ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வீரர் விராட் கோலி. மேலும் இதுவரை காணாத உச்சத்திற்கு இந்திய அணியை அவர் நிச்சயம் அழைத்துச் செல்வார்.

அவரைப் பற்றி கூற வார்த்தைகள் இல்லை. அவரது சுயக்கட்டுப்பாடு அபரிமிதமானது. தான் என்ன சாப்பிட வேண்டும் என்பதையும் அவர் திட்டமிடுகிறார், பயிற்சியிலும் அவர் கட்டுக்கோப்பானவர், உடற்தகுதி போன்ற விஷயங்களில் அவர் ‘ரோல் மாடல்’ என்றுதான் கூற வேண்டும்.

சதங்கள் எப்படி அடிப்பது என்பதை விராட் கோலி கற்றுக் கொண்டிருப்பதை போல நான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தும் விதத்தை கற்று வைத்துள்ளேன். விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமானவர். அவரது ஆக்ரோஷத்தை அராஜகம் என்று புரிந்து கொள்ளுதல் தவறு. அவர் தனது உணர்வுகளை இருதயத்தில் தரித்து ஆடுபவர்.

அவர் உடற்தகுதி அபாரமானது, ஒரு உதாரணமாக திகழ்ந்து தலைமையேற்று நடத்துகிறார். அவர் இப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும் போதுதான் மற்றவர்களையும் அவர் வேலை வாங்க முடியும். ஆட்டத்தின் எந்த புலத்திலும் அவர் தன்னை உதாரணமாக திகழுமாறு செயல்படுகிறார்.

பெரிய இலக்குகளை வெற்றிகரமாக விரட்டும் தந்திரத்தை அவர் அறிந்து வைத்துள்ளார். 2 ரன்கள், 3 ரன்களை ஓடி எடுக்கும் தந்திரங்களையும் அவர் கற்றுத் தேர்ந்துள்ளார்.

ஒருகாலத்தில் மைக்கேல் பெவன் விரட்டல் மன்னன் என்று கூறி வந்தோம். ஆனால் இது வேறு ஒரு காலக்கட்டம், வெவ்வேறு விதமான இலக்குகளை விரட்ட வேண்டியுள்ளது. இது எங்கு செல்லும் என்று கூற முடியவில்லை, இன்னும் சிலநாட்களில் 400 ரன்கள் இலக்கை கூட ரெகுலராக வெற்றிகரமாக துரத்துவோம் என்று நினைக்கிறேன். 40 ஓவர்களுக்கு தாண்டியும் தன்னை அவர் நிலைநிறுத்திக் கொள்வது உலகில் அவர் சிறந்த வீரர் என்பதைக் காட்டுகிறது.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x